டெஹ்ரான்: ஈரானின் அதிபர் மசூத் பெஸஷ்கியான் அந்நாட்டின் உச்சத் தலைவர் மொஜ்தபா காமெனியைச் சந்திப்பதில் தமக்கு சிரமமாக உள்ளதென கடந்த வாரம் தொலைக்காட்சி ஒன்றிடம் தெரிவித்தது சர்ச்சையைக் கிளப்பியது.
மார்ச் மாதம் நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்ற மொஜ்தபாவை அன்றிலிருந்து எந்தப் பொது நிகழ்ச்சியிலும் காண்பது அரிதாகிவிட்டது.
இருப்பினும் திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) அரசாங்கத்தின் அதிகாரபூர்வ ஊடகத்திடம் பேசும்போது அண்மையில் அதிபர் உச்சத்தலைவரை சந்தித்து எட்டு மணி நேரம் வரை உரையாடியதாகத் தெரிவித்தார்.
ஈரானில் இயங்கும் பல அரசியல் பிரிவுகளின் மாநாட்டில் கலந்துகொண்ட பிறகு அதிபர் செய்தியாளர்களைச் சந்தித்தபோது கருத்துரைத்தார்.
மோசமடைந்துள்ள அந்நாட்டு வாழ்க்கைத் தரத்தை எவ்வாறு மேம்படுத்துவது என்பதைப் பற்றியும், பிளவுபட்டுள்ள பல அரசியல் அமைப்புகளை ஒன்றிணைப்பது குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்ததாக அதிபர் குறிப்பிட்டார்.
ஒற்றுமையையும் ஒருங்கிணைப்பையும் ஈரானில் நிலைநாட்டுவதே பெரும் சவாலாக உள்ளதென உச்சத் தலைவர் மொஜ்தபா காமெனி கருதுவதாக அதிபர் மசூத் பெஸஷ்கியான் செய்தியாளரிடம் தெரிவித்தார்.


