புதுடெல்லி: ஈரானின் முன்னாள் உச்சநிலைத் தலைவர் ஆயத்துல்லா அலி காமெனியின் இறுதிச்சடங்கில் அவரது மகனும் தற்போதைய உச்சநிலைத் தலைவருமான மொஜ்தபா காமெனி பங்கேற்க மாட்டார் என்று இந்தியாவில் உள்ள அவரது பிரதிநிதி கூறியதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.
பாதுகாப்புக் காரணங்களுக்காக அவர் அந்த நிகழ்வில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.
இஸ்ரேலின் அச்சுறுத்தல்கள் மற்றும் கண்காணிப்பில் நிலவும் அபாயங்கள் காரணமாக, பொது நிகழ்ச்சிகளில் மொஜ்தபா பங்கேற்பது ஆபத்தானதாக அமையும் என்று ஆயத்துல்லா ஹக்கீம் ஏலாஹி என்பவர் கூறியதாக செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானை 36 ஆண்டு காலம் ஆட்சி நடத்திய அலி காமெனி கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி கொல்லப்பட்டார். அமெரிக்க, இஸ்ரேலியப் படைகள் ஈரானில் தாக்குதலைத் தொடங்கியதும் அந்தச் சம்பவம் நிகழ்ந்தது.
அலி காமெனியின் இறுதிச்சடங்குகள் ஜூலை 4ஆம் தேதி டெஹ்ரானில் தொடங்குகின்றன. டெஹ்ரானின் தென் பகுதி புனித நகரா குவோமில் அந்தச் சடங்குகள் நிறைவுற்று ஜூலை 9ஆம் தேதி அவரது சொந்த நகரான மஷாத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று ஈரான் அறிவித்துள்ளது.
பல வாரங்களாக துக்கம் கடைப்பிடிக்கப்பட்ட பின்னர் அவரது இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்று வருவதாகக் கூறப்படுகிறது.

