உக்ரேனிலும் பரவிய ஈரான் போர்

உக்ரேனிலும் பரவிய ஈரான் போர்

2 mins read
ca69fdb1-e243-4ea5-9e7c-eb065f823655
அமெரிக்க மத்திய தளபத்தியம் வெளியிட்ட படத்தில் ஓமானின் அருகில் உள்ள கடலில் மொசாம்பிக்கில் பதிவுசெய்யப்பட்ட கப்பல் முகப்பில் ஏற்பட்ட வெடிப்பினால் ஒளி கிளம்புவது காணப்பட்டது. - படம்: ராய்ட்டர்ஸ்

ஏதன்ஸ்: ஈரான்மீது அமெரிக்கா நடத்தி வந்த வான்வழித் தாக்குதல்களைத் தற்காலிகமாக நிறுத்தியுள்ள நிலையிலும், போர் உலகின் புதிய பகுதிகளுக்குப் பரவிவருகிறது.

ஏமனில் இயங்கும் ஈரானின் ஆதரவுபெற்ற ஹூதி போராளிகள் செங்கடல் அருகே அமைந்துள்ள சவூதி அரேபியாவின் ஜிசான், யான்பு ஆகிய இரு முக்கிய எண்ணெய் உற்பத்தி ஆலைகள்மீது சனிக்கிழமை (ஜூலை 25) தாக்குதல் நடத்தினர்.

இது, ஹோர்முஸ் நீரிணையை அடுத்து மத்திய கிழக்கின் இரண்டாவது முக்கியக் கடல்வழிப் பாதையிலும் எரிசக்தி விநியோகம் பாதிக்கப்படும் அபாயத்தை ஏற்படுத்திவிட்டது. அத்துடன் ஏமனில் உள்நாட்டுப் போர் மீண்டும் தீவிரமடையும் அச்சமும் எழுந்துள்ளது.

அதன் தொடர்பிலான மற்றொரு சம்பவத்தில், காஸ்பியன் கடலில் பயணம் செய்த தனது வர்த்தகக் கப்பல்மீது உக்ரேன் தாக்குதல் நடத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

அந்தக் கப்பலில் நேர்ந்த வெடிப்புச் சம்பவத்தில் அதன் மாலுமி ஒருவர் மாண்டதோடு மற்றொருவர் படுகாயமடைந்தார் என்று ஈரான் கடிந்துகொண்டது.

இந்தத் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில் டெஹ்ரானில் உள்ள உக்ரேனியத் தூதரக அதிகாரியை வெளியுறவு அமைச்சு நேரில் வரவழைத்து விளக்கம் கோரியதாக ஈரானின் அரசாங்க ஊடகம் தெரிவித்தது.

முன்னதாக, காஸ்பியன் கடலில் நடத்தப்பட்ட நெடுந்தொலைவுத் தாக்குதல்களை உக்ரேனிய அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி பாராட்டினார். ஆனால், தாக்குதலுக்கு இலக்கான கப்பலின் விவரங்களை அவர் குறிப்பிடவில்லை. மத்திய கிழக்கில் ஈரான் தாக்குதல்களைத் துல்லியமாக நடத்த ரஷ்யா தனது செயற்கைக்கோள் தரவுகளை வழங்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே, கடந்த இரண்டு வாரங்களில் முதன்முறையாக ஈரான்மீதான வான்வழித் தாக்குதல்களை அமெரிக்கா நிறுத்திவைத்தது. இருப்பினும், ஈரான்மீதான கடற்படை முற்றுகை முழு வீச்சில் தொடர்வதாக அமெரிக்க ராணுவம் கூறியது.

அமைதிப் பேச்சுவார்த்தைக்கே அதிபர் டோனல்ட் டிரம்ப் முன்னுரிமை அளிப்பதாகவும், ஈரான் பேச்சுவார்த்தைக்கு இணங்காவிட்டால் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் வெள்ளை மாளிகை எச்சரித்துள்ளது.

ஈரான் அண்டை நாடுகள்மீது நடத்தி வந்த தாக்குதல்களும் சனிக்கிழமை நிறுத்தப்பட்டதால், மத்திய கிழக்குப் பகுதியில் தற்காலிக அமைதி நிலவியது.

குறிப்புச் சொற்கள்
மத்திய கிழக்குஈரான் போர்உக்ரேன்ரஷ்யாகப்பல் எண்ணெய்வர்த்தகம்சவூதி அரேபியாசெங்கடல்எண்ணெய்க் கப்பல்ஆலை