ஜகார்த்தா: ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பில் போராளிகளாக இருந்த சிலர் அல்-ஹோல் முகாமில் இருந்து தப்பிச் சென்றதை அடுத்து, அவர்களின் குடும்பத்தினர் திடீர் கவலையில் மூழ்கியுள்ளனர்.
இவ்வாறு சிரியாவிலிருந்து குடிமக்கள் திரும்புவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படுவதால் அவர்களை என்ன செய்வது? அவர்கள் தண்டிக்கப்பட வேண்டுமா? போராளிகளாக இருந்த அவர்கள் வழிகளை மாற்றிக்கொள்ள உதவ வேண்டுமா? சமூகத்துடன் மீண்டும் அவர்களை ஒன்றிணைக்க முயல வேண்டுமா? என்பன போன்ற பல கேள்விகளுக்கு பதில் தேடி திகைத்து நிற்கின்றனர் சமூகத்தினர். அச்சமும் அவர்களைச் சூழ்ந்துள்ளது.
சிரியா முகாமிலிருந்து தாயகத்திற்கு திரும்பும் அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய ஆதரவுகள் குறித்து அரசுகள் பதிலளிக்க வேண்டிய கடினமான கேள்வி இது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனவரி மாதம் அவர்கள் தப்பிச் சென்ற செய்தி பிப்ரவரி 25 அன்று வெளியான பிறகு, அவர்கள் வீடு திரும்புவதற்கான சாத்தியங்கள் குறித்த அச்சங்கள் நீடித்துவருகின்றன.
இதற்கிடையே, அவ்வாறு திரும்பி வந்தவர்கள்மீது வழக்கு தொடுத்தல், பயங்கரவாதத் தொடர்புகளிலிருந்து அவர்களை மீட்பது, மறுஒருங்கிணைப்புக்கான வழிகள் குறித்த கேள்விகள் பரவலாக எழுந்துள்ளன.
அண்மையில் இந்தோனீசிய அதிகாரிகள் இதுகுறித்துக் கருத்துரைத்தனர். அப்போது, சிரியாவில் இருந்த வெளிநாட்டு பயங்கரவாதப் போராளிகளுடன் தொடர்புடைய 308 பேர் தாங்கள் இந்தோனீசியாவைச் சேர்ந்தவர்கள் என்று கூறிக்கொண்டதாக அதிகாரிகள் கூறினர்.
இந்தோனீசிய அரசாங்கம் அவர்களின் குடியுரிமையை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகள், அதற்கான செயல்முறைகளையும் நிறுத்தி வைத்துள்ளது.
அவர்களை மீண்டும் எங்கு அனுப்புவது என்பது குறித்த எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை. ஏனெனில், அதற்கு முன்பாக அவர்களின் அடையாளங்கள், பயங்கரவாதத்துடனான அவர்களது தொடர்புகள் எந்த அளவுக்கு இருக்கிறது, அதில் நிலவும் பாதுகாப்பு அபாயங்கள் ஆகியவை முதலில் சரிபார்க்கப்பட வேண்டும் என்றும் அரசு வலியுறுத்தியது.
தொடர்புடைய செய்திகள்
இந்தோனீசியர்கள் என்று கூறிக்கொள்ளும் சிரியாவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் இப்போது உள்ளூர் சிரிய குடும்பங்களுடன் தங்கியுள்ளதாகவும், ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகள் பிரிவுப் பொறுப்பில் அவர்கள் உள்ளதாகவும் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதற்கிடையே, முகாமை மேற்பார்வையிட்ட குர்திஷ் படைகள் அங்கிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து, அங்கிருந்து தப்பிச் சென்றவர்களில் மலேசிய நாட்டவர் யாராவது இருக்கிறார்களா என்று மலேசிய அதிகாரிகளும் சோதனையை முடுக்கிவிட்டுள்ளனர்.

