கோலாலம்பூர்: ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் தாக்குதல் நடத்தி வருவதால் மத்தியக் கிழக்கில் பதற்றநிலை நிலவுகிறது.
இந்நிலையில் மலேசியத் தலைநகர் கோலாலம்பூரிலிருந்து மத்தியக் கிழக்கிற்குப் புறப்பட்ட இரண்டு மலேசியா ஏர்லைன்ஸ் விமானங்கள், வான்வழி ஆபத்து அதிகரித்திருப்பதாக நடுவானில் வந்த ஆலோசனையைத் தொடர்ந்து, திருப்பி விடப்பட்டதாக மலேசிய செய்தி நிறுவனமான பெர்னாமா தெரிவித்துள்ளது.
கத்தார் தலைநகர் தோஹா நோக்கிச் சென்றுகொண்டிருந்த எம்எச்160 விமானம் மீண்டும் கோலாலம்பூருக்கே திரும்பியது. அதே வேளையில், சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரை நோக்கிச் சென்றுகொண்டிருந்த எம்எச்156 விமானம் இந்தியாவின் சென்னை நகருக்குத் திருப்பி விடப்பட்டதாக மலேசியா ஏர்லைன்ஸ் அறிக்கையை மேற்கோள்காட்டி பெர்னாமா கூறியுள்ளது.
இரண்டு விமானங்களும் இப்போது பாதுகாப்பாக கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்துக்குத் திரும்பிவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
போர் மூண்டுள்ள பகுதிகளில் பின்பற்றப்படும் வழக்கமான விமானத் திசைதிருப்பல் நெறிமுறைகளின்படி இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக மலேசிய ஏர்லைன்ஸ் விமானச் சேவை நிறுவனம் சனிக்கிழமையன்று (பிப்ரவரி 28) வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று விமான ஏற்பாடுகள் மற்றும் தேவைப்பட்ட இடங்களில் தங்குமிட வசதிகள் செய்து தரப்பட்டன,” என்று மலேசிய ஏர்லைன்ஸ் விமானச் சேவை நிறுவனம் கூறியுள்ளது.

