டெல் அவிவ்: ஈரானியத் தலைநகர் தெஹ்ரானில், ஹமாஸ் அமைப்பின் முன்னாள் தலைவர் இஸ்மாயில் ஹனியே அண்மையில் படுகொலை செய்யப்பட்டார்.
இதற்கு இஸ்ரேல்தான் காரணம் என்று பரவலாகப் பேசப்படுகிறது.
திரு ஹனியேவின் படுகொலைக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீது ஈரானும் ஹிஸ்புல்லா படையும் தாக்குதல் நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், தாக்குதல்களை எதிர்கொள்ள இஸ்ரேல் தயாராகி வருகிறது.
உணவு, தண்ணீர் ஆகியவற்றை வெடிகுண்டுகளால் எளிதில் தகர்க்க முடியாத அறைகளில் பூட்டி வைக்கும்படி இஸ்ரேலியர்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
மருத்துவமனைகளில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை கீழ்த்தளங்களுக்கு மாற்ற ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.
இஸ்ரேலின் முக்கிய நகரங்களில் தேடுதல், மீட்புக் குழுக்கள் தயார்நிலையில் உள்ளன.
அண்மையில், ஹிஸ்புல்லா அமைப்பின் முக்கிய தளபதி ஒருவரான ஃபொவாட் ஷுக்குரையும் இஸ்ரேல் கொன்றது. அதற்குப் பழிதீர்க்கும் வகையில் இஸ்ரேலுக்கு எதிராக மிகப் பெரிய தாக்குதலை நடத்தப்போவதாக ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் திரு ஹசான் நஸ்ரல்லா சூளுரைத்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்
இதற்கிடையே, தாக்குதல்களை எதிர்கொள்ளவும் எதிரிப் படைகள் மீது தாக்குதல் நடத்தவும் இஸ்ரேல் தயாராக இருப்பதாக ஆகஸ்ட் 7ஆம் தேதியன்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தெரிவித்தார்.

