பெய்ரூட்: அண்மையில், சிரியாவில் டுரூஸ் சமூகத்தினருக்கும் பெடோயின் சமூகத்தினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.
இதையடுத்து, டுரூஸ் சமூகத்தினரைப் பாதுகாக்க ஜூலை 16ஆம் தேதியன்று சிரியா தலைநகர் டமாஸ்கஸ் மீது இஸ்ரேல் வான்வழித் தாக்குதல் நடத்தியது.
சிரியாவில் டுரூஸ் சமூகத்தினர் சிறுபான்மையினத்தவர்கள். லெபனானிலும் இஸ்ரேலிலும் டுரூஸ் சமூகத்தினர் உள்ளனர். அவர்கள் சிறுபான்மையினத்தவர்கள் என்றபோதிலும் செல்வாக்குமிக்கவர்கள்.
இந்நிலையில், போர் நிறுத்தத்துக்கு இஸ்ரேலும் சிரியாவும் இணக்கம் தெரிவித்துள்ளன.
“சண்டை போடுவதை நிறுத்திவிட்டு மற்ற சிறுபான்மை இனத்தவர்களுடன் இணைந்து புதிய, ஒற்றுமைமிக்க சிரியாவை உருவாக்கும்படி டுரூஸ், பெடுவான், சன்னி முஸ்லிம்கள் ஆகிய சமூகங்களுக்கு அழைப்பு விடுக்கிறோம்,” என்று துருக்கிக்கான அமெரிக்கத் தூதர் திரு டோம் பராக் எக்ஸ் தளத்தில் பதிவிட்டார்.
இஸ்ரேலுக்கும் சிரியாவுக்கும் இடையிலான போர் நிறுத்தத்துக்கு துருக்கி, ஜோர்டான் உட்பட அண்டை நாடுகளும் ஆதரவு வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
போர் நிறுத்தம் குறித்து அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனில் உள்ள இஸ்ரேலியத் தூதரகமும் கனடாவில் உள்ள சிரியா தூதரகமும் கருத்து தெரிவிக்கவில்லை.
டுரூஸ் சமூகத்தினருக்கும் பெடுவான் சமூகத்தினருக்கும் இடையிலான மோதல் சிரியாவின் சுவேய்டா மாநிலத்தில் நிகழ்ந்தது.
தொடர்புடைய செய்திகள்
அடுத்த இரண்டு நாள்களுக்கு அந்த மாநிலத்துக்குள் நுழைய சிரியா ராணுவத்துக்கு கட்டுப்பாடுகளை விதித்திருப்பதாக வெள்ளிக்கிழமையன்று (ஜூலை 19) இஸ்ரேல் கூறியது.
இது ஒருபுறம் இருக்க, டுரூஸ் சமூகத்தினர் அதிகம் உள்ள சுவேய்டாவில் தனது உள்நாட்டுப் பாதுகாப்பு படைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக சிரியா அரசாங்கம் தெரிவித்துள்ளது.
வன்முறையை நிறுத்தும்படி சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரிடமும் அது வலியுறுத்தியுள்ளது.
டுரூஸ் சமூகத்தினருக்கும் பெடோயின் சமூகத்தினருக்கும் இடையிலான மோதலில் இதுவரை நூற்றுக்கணக்காணோர் மாண்டுவிட்டனர்.
அரபு நாடுகள் மற்றும் அமெரிக்காவின் தலையீட்டால் அமைதி நிலைநாட்டப்பட்டது என்று தெரிவித்த சிரியாவின் இடைக்கால அதிபர் அகமது அல் ஷாரா, சிரியா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களுக்குக் கண்டனம் தெரிவித்தார்.
மக்களைப் பிளவுபடுத்தும் மண்ணாக சிரியா இருக்காது என்று அவர் கூறினார்.