ஜெருசலம்: சென்ற வார இறுதியில் ஈரான் நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி தருவதில் உறுதியுடன் இருக்கிறோம் என்று இஸ்ரேல் ராணுவத் தலைவர் ஹெர்சி ஹலேவி தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை (ஏப்ரல் 13) ஈரான் முதன்முறையாக இஸ்ரேல்மீது நேரடித் தாக்குதலை நடத்தியது. முந்நூற்றுக்கும் மேற்பட்ட ஏவுகணைகளும் ஆளில்லா வானூர்திகளும் அத்தாக்குதலில் ஈடுபடுத்தப்பட்டன.
ஆயினும், அவற்றில் கிட்டத்தட்ட 99 விழுக்காட்டை அழித்துவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்தது.
சிரியா தலைநகர் டமாஸ்கசில் உள்ள ஈரான் துணைத் தூதரகம்மீது இஸ்ரேல் இம்மாதம் 1ஆம் தேதி வான்வழித் தாக்குதல் நடத்தியது. அதில் 12 பேர் கொல்லப்பட்டதாகச் சொல்லப்பட்டது.
அத்தாக்குதலுக்குப் பதிலடி தரும் விதமாகவே இஸ்ரேல்மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்தது.
அத்தாக்குதலுக்கு அமெரிக்கா, ஜப்பான், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஆயினும், பதில் தாக்குதல் தொடுத்து, மத்தியக் கிழக்கில் பதற்றத்தை மேலும் அதிகரிக்க வேண்டாம் என்று பல நாடுகளும் இஸ்ரேலை வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில், “ஏராளமான ஏவுகணைகளையும் ஆளில்லா வானூர்திகளையும் செலுத்தி இஸ்ரேல்மீது நடத்திய தாக்குதலுக்குப் பதிலடி தரப்படும்,” என்று ஹலேவி தெரிவித்திருக்கிறார்.
அதே நேரத்தில், பதில் தாக்குதல் எப்படி இருக்கும் என்பது குறித்து அவர் எதுவும் கூறவில்லை.
முன்னதாக, ஈரான்மீது இஸ்ரேல் பதில் தாக்குதலில் இறங்கினால் அதில் அமெரிக்கா பங்குகொள்ளாது என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகிடம் தெரிவித்துவிட்டார்.
இதனிடையே, பிரெஞ்சு அதிபர் இமானுவல் மெக்ரோன், ஜெர்மானியப் பிரதமர் ஒலாஃப் ஷோல்ஸ், பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் டேவிட் கேமரன், ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ் உள்ளிட்டோர், போர்ப் பதற்றத்தை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டாம் என்று இஸ்ரேலைக் கேட்டுக்கொண்டுள்ளனர்.