கோலாலம்பூர்: இஸ்ரேலியக் குடிமக்கள் மலேசியாவுக்குள் கண்டறியப்பட்டால் அவர்கள் உடனடியாக நாடு கடத்தப்படுவார்கள் என்று பிரதமர் அன்வார் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேலை ஒரு நாடாக அங்கீகரிப்பதில்லை என்ற தெளிவான கொள்கையை மலேசியா கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மலேசியாவில் இஸ்ரேல் நாட்டினர் நடமாட்டம் இருப்பதாகக் கூறப்படும் புகார்கள் குறித்து, சம்பந்தப்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் அனைத்தும் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் பிரதமர் அன்வார் தெரிவித்தார்.
அண்மையில், ஜோகூரில் இரட்டைக் குடியுரிமை ஆவணங்களைப் பயன்படுத்தி இஸ்ரேல் நாட்டினர் நடமாடியதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அதைச் சுட்டிக்காட்டி திரு அன்வார் செய்தியாளர்களிடம் புதன்கிழமை (ஜூலை 15) பேசினார்.
“இந்த விவகாரத்தைப் பாதுகாப்பு அதிகாரிகள் கையாண்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அமைச்சு இது பற்றிய கூடுதல் விவரங்களை வழங்கும்,” என்று அவர் கூறினார்.
இந்நிலையில், ஜோகூர் அரசாங்கம் மலேசியாவின் உள்துறை அமைச்சிடம் ஃபாரஸ்ட் சிட்டியில் செயல்படும் நெட்வொர்க் ஸ்கூல் தொடர்பான விசாரணையை நடத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
நெட்வொர்க் ஸ்கூல் நடத்திய நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இஸ்ரேலியர்கள் தங்களது இரண்டாவது குடியுரிமை ஆவணங்களைப் பயன்படுத்தியதாகச் சந்தேகிக்கப்படுகிறது.

