காஹூலுயி, ஹவாயி: ஹவாயி தீவின் மாவி பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் மாண்டோரின் எண்ணிக்கை ஞாயிற்றுக்கிழமை 93ஐ எட்டியது. காணாமல்போனவர்களின் உறவினர்கள் தங்களின் அன்புக்குரியவர்களை உயிருடன் மீட்கும் நம்பிக்கையில் தீவிரமான தேடலில் ஈடுபட்டு வருகின்றனர்.
முற்றிலும் எரிந்துபோயிருக்கும் லஹைனா நகர் போர்ப் பகுதிபோல் காட்சியளிப்பதாக ஹவாயி ஆளுநர் ஜோஷ் கிரின் கூறினார். வேகமாகப் பரவிய தீ, மாவியின் வடமேற்குக் கடலோரப் பகுதியைச் சூழ்ந்தது.
காட்டுத் தீ மூண்டு சில நாள்கள் ஆகிவிட்டன. ஆனாலும் அதிகாரிகள் தொடர்ந்து ஆங்காங்கே திடீரென எழும் தீச்சம்பவங்களுக்கு எதிராகப் போராடுகின்றனர்.
உயிருடன் இருப்பவர்களை மீட்பதற்காக மோப்ப நாய்கள் தேடல் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
காட்டுத் தீயின் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று டாக்டர் கிரின் உறுதிகூறினார். காட்டுத் தீ குறித்து தங்களை எச்சரிக்க இன்னும் வேகமாகச் செயல்பட்டு இருக்கலாம் என குடியிருப்பாளர்கள் குறைகூறியதைத் தொடர்ந்து அவரின் கருத்து வெளியானது.
சிலர் தங்களுக்கு முறையான எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று கூறினர். தங்களைச் சுற்றியுள்ள நகரை காட்டுத்தீ சில நிமிடங்களிலேயே அழித்துவிட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.
மற்ற சிலர் தப்பிப்பதற்காக பசிஃபிக் பெருங்கடலில் குதித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.