கோலாலம்பூர்: மலேசியாவின் பிரபல விமான நிறுவனமான ஏர் ஏஷியாவை நிறுவியவர்களில் ஒருவரான டோனி ஃபெர்னாண்டசுக்கு புதிய பட்டம் கிடைத்துள்ளது. அவர், தாத்தா என்ற பட்டத்தைப் பெற்றுள்ளார்.
பேத்தி ஒலிவியா ரோஸ் பிறந்ததைத் தொடர்ந்து தாம் தாத்தாவாகிவிட்டதை அவர் பெருமையுடன் கூறியுள்ளார்.
மார்ச் 19ஆம் தேதி பேத்தியின் படத்தையும் அவர் ஃபேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டார்.
குழந்தையின் பெற்றோர் நலமுடன் இருப்பதாகவும், இந்த முக்கிய மைல்கல்லை எண்ணித் தாம் மகிழ்ச்சி அடைவதாகவும் ஃபெர்னாண்டஸ் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் தெரிவித்துள்ளார்.
“ஒலிவியா ரோசை இவ்வுலகிற்கு வரவேற்கிறேன். குழந்தையின் அப்பாவும் அம்மாவும் நலமாக இருக்கிறார்கள். சிறந்த பெற்றோராக அவர்கள் இருப்பார்கள். நானும் தாத்தாவாக ஆகிவிட்டேன்,” என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.
அவரது பதிவுக்கு ஏராளமானோர் வாழ்த்துத் தெரிவித்து பதில் பதிவு வெளியிட்டுள்ளனர். ஃபெர்னாண்டஸ் தாத்தா என்ற பட்டத்துடன் உண்மையான ‘டத்தோ’ பட்டத்தையும் பெற்றுள்ளார் என்று சிலர் நகைச்சுவையுடன் பதிவிட்டுள்ளனர்.

