தோக்கியோ: நிலவில் கலன்களைக் கொண்டுசெல்லும் சேவையை ஜப்பான் ஏர்லைன்ஸ் தொடங்கவுள்ளது.
அந்நிறுவனம் செவ்வாய்க்கிழமை (மே 26) இதனை அறிவித்தது. வருங்காலத்துக்காகப் பொருள்களைப் பாதுகாப்பாக வைக்க உதவுவதே இந்நடவடிக்கையின் நோக்கமாகும்.
சம்பந்தப்பட்ட கலன்களில் உள்ள பகுதியைப் பிரித்து ஜப்பான் ஏர்லைன்ஸ் நிறுவனங்களுக்கும் உள்ளூர் அரசாங்கங்களுக்கும் விற்கும். அதன் மூலம் வருங்காலத் தலைமுறையினருக்கான பாதுகாக்கவேண்டிய பொருள்களை அந்தக் கலன்களில் வைத்து அனுப்ப முடியும்.
இச்வேவை, உலகின் முதல் நிலவுப் போக்குவரத்துச் சேவையாக விளங்கும் என்று ஜப்பான் ஏர்லைன்ஸ் கூறியுள்ளது.
முதல் சேவையை 2028ஆம் ஆண்டு தொடங்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள ஐஸ்பேஸ் நிறுவனம் ஒரு கலனை நிலவுக்கு அனுப்பும்.
ஒவ்வொரு கலனின் அகலமும் நீளமும் 20 சென்டிமீட்டராக இருக்கும். அதன் ஆழம் 10 சென்டிமீட்டராக இருக்கும். இச்சேவைக்கான விலை உள்ளிட்ட மற்ற தகவல்கள் பின்னர் முடிவுசெய்யப்படும்.
ஜப்பான் ஏர்லைன்ஸ், நிலவின் சுற்றுச்சூழலுக்கு ஏற்ற கலனை உருவாக்கி அக்கலன்களில் வைக்கப்படும் பொருள்களுக்குக் கோரிக்கை விடுக்கும். விண்வெளி மேம்பாட்டுத் துறையில் நிலவு தொடர்பான ஆர்வம் அதிகரித்துவருவதையொட்டி நிலவுப் போக்குவரத்துச் சேவைகளில் முன்னுதாரணமாக விளங்கும் இலக்கைக் கொண்டுள்ளது ஜப்பான் ஏர்லைன்ஸ்.

