தோக்கியோ: நிலவை ஆய்வு செய்வதற்காக ஜப்பான் முதல்முறையாக விண்கலம் அனுப்பியுள்ளது.
“மூன் ஸ்னைப்பர்” எனப் பெயரிடப்பட்ட அந்த விண்கலத்தை ஜப்பான் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட H-IIஏ உந்துகணையில் வியாழக்கிழமை விண்ணில் ஏவியது.
இதன்மூலம் ஜப்பான் நிலவில் கால்பதிக்கும் ஐந்தாவது நாடு என்ற பெருமையைப் பெற்றது.
தனெகாஷிமா விண்வெளி ஆய்வு நிலையத்திலிருந்து “மூன் ஸ்னைப்பர்” வெற்றிகரமாக விண்ணில் பாய்ச்சப்பட்டது என ஜப்பான் விண்வெளி ஆய்வு அமைப்பு (ஜாக்சா) தெரிவித்தது.
100 மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் தயாரிக்கப்பட்ட இந்த விண்கலம் (S$136 மில்லியன்) நிலவின் மேற்பரப்பை அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதத்திற்குள் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்நாட்டின் விண்வெளி ஆய்வு அமைப்பு விண்கலம் விண்ணில் ஏவப்படுவதை நேரடியாக ஒளிபரப்பியது.
ஏற்கெனவே மூன்று முறை நிலவை ஆய்வுசெய்ய விண்கலம் அனுப்ப ஜப்பான் திட்டமிட்டது. ஆனால் மோசமான வானிலை காரணமாக மூன்று முறையும் அது சாத்தியமில்லாமல் போனது.
நிலவின் இதுவரை ஆய்வு செய்யப்படாத பகுதியான தென் துருவத்திற்கு இந்தியா விண்கலம் அனுப்பிய இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஜப்பான், நிலவுக்கு விண்கலம் அனுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

