தோக்கியோ: ஜப்பானில் கட்டணம் செலுத்திப் பயணம் செய்யும் வணிகரீதியிலான ‘பறக்கும் கார்’ சேவைகளை 2027 அல்லது 2028ஆம் ஆண்டில் தொடங்குவதற்கு ஒப்புதல் வழங்குவதற்கான ஏற்பாடுகளை அந்நாட்டு அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.
முதற்கட்டமாக நகர்ப்புறங்களில் சுற்றுலாப் பயணங்களுக்காக இச்சேவை தொடங்கப்படவுள்ளது. அதன் பின்னர், நகரங்களையும் விமான நிலையங்களையும் இணைக்கும் போக்குவரத்துச் சேவையாக இது விரிவுபடுத்தப்படும்.
நூற்றாண்டின் மிகப்பெரிய போக்குவரத்துப் புரட்சியாகக் கருதப்படும் இந்தத் திட்டம், மிக விரைவில் நனவாகவுள்ளது.
பறக்கும் கார்களின் சிறப்பு
மின்சாரத்தில் இயங்கும் இவ்வகை கார்களுக்கு ஓடுபாதை தேவையில்லை. செங்குத்தாக மேலேறித் தரையிறங்கும் ஆற்றல் இவற்றுக்கு உண்டு.
குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளுடன், குறைவான சத்தத்துடன் இயங்கக்கூடியவை. சிறிய இடங்களிலும் தரையிறங்க முடியும் என்பதால் நெரிசலான நகரங்களுக்கு ஏற்றவையாகக் கருதப்படுகின்றன.
போக்குவரத்து நெரிசலைக் குறைக்கவும் வட்டாரப் பகுதிகளுக்குப் புதிய போக்குவரத்துத் தீர்வை வழங்கவும் இவை உதவும்.
பறக்கும் கார்களை உருவாக்குவதில் நிறுவனங்களுக்கிடையே போட்டி வலுத்து வருவதாகத் தெரிகிறது.
கடந்த ஆண்டு செப்டம்பரில் நடைபெற்ற ஒசாக்கா-கன்சாய் கண்காட்சியில் இவ்வகைப் பறக்கும் கார்களின் செயல்பாடு குறித்த நேரடி விளக்கக் காட்சிகள் இடம்பெற்றன. ஆனால் அப்போது பயணிகள் யாரும் காருக்குள் இல்லை.
தொடர்புடைய செய்திகள்
பறக்கும் கார்கள் தொடர்பில் அனைத்துலக விதிமுறைகள் இன்னும் வரையப்படவில்லை. இருப்பினும், ஜப்பானியப் போக்குவரத்து அமைச்சு பாதுகாப்பு அம்சங்களை ஏற்கெனவே நிறுவியுள்ளது. மின்கலன்களுக்குச் செயல்பாட்டு நிபந்தனைகளும், நீர்நிலைகளுக்குமேல் செல்லும் பறக்கும் கார்களில் உயிர்காப்பு அங்கிகள் கட்டாயம் இருக்க வேண்டும் என்பதும் அவற்றில் அடங்கும்.


