தமது டுவிட்டர் பதிவை 'ரீடுவீட்' செய்வோரில் 1,000 பேரைத் தேர்ந்தெடுத்து ஆளுக்கு 1 மில்லியன் யென் (S$ 12,348), ரொக்கத்தை பரிசாக அளித்திருக்கிறார் ஜப்பானிய பணக்காரர் ஒருவர்.
ஜப்பானில் பிரபல 'பேஷன் ஆன்லைன்' நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக இருப்பவர் யுசாக்கு மேஸாவா. அமெரிக்க நிறுவனத்தின் மூலம் நிலாவுக்கு பயணிக்க பல கோடிகளை கொடுத்து முன்பதிவு செய்த சிலரில் இவரும் ஒருவர்.
பல வித்தியாசமான நடவடிக்கைகளால் உலகில் பலரையும் ஆச்சரியத்துக்கு ஆளாக்கி வருபவர் யுசாக்கு.
புத்தாண்டு தினத்தன்று தமது ஒரு 'டுவிட்டர்' பதிவை 'ரீடுவீட்' செய்வோரில் 1,000 பேரைத் தேர்ந்தெடுத்து ஆளுக்கு ஒரு மில்லியன் யென் தருவதாக அவர் அறிவித்திருந்தார்.
இதை பலர் நம்ப மறுத்தாலும், போகிறபோக்கில் சிலர் அவரது குறிப்பிட்ட பதிவை 'ரீடுவீட்' செய்தனர்.
ஆனால், அவர் சொன்னதுபோலவே, 1,000 பேரைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு தலா ஒரு மில்லியன் யென் மதிப்பிலான தொகையையும் தந்து அசத்தியுள்ளார்.
பணம், அந்த குறிப்பிட்ட நபர்களுக்கு எந்த அளவுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது என்பதை அறியேவே இந்த சமூக சோதனையை மேற்கொண்டதாகக் குறிப்பிட்டுள்ளார் யுசாக்கு.
பணத்தின் தாக்கம் மக்களிடம் எந்த அளவுக்கு இருக்கிறது என்பதைப் பற்றிய தமது ஆய்வு தொடரும் என்றும் அவர் கூறியுள்ளார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

