தோக்கியோ: ஜப்பானிய நாடாளுமன்றத்தின் கீழவை, கடந்த பிப்ரவரி மாதம் 8ஆம் தேதி நடந்த தேர்தலில் மூன்றில் இரண்டு பங்கு வெற்றிபெற்று பிரதமரான 64 வயதான சானே தக்காய்ச்சியின் பதவியை மறு நியமனம் செய்துள்ளது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தற்காலிகப் பிரதமராக அவர் பொறுப்பேற்றபோது அந்நாட்டு வரலாற்றில் பிரதமர் பதவி வகித்த முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார்.
அந்தப் பெருமையைப் பொதுத் தேர்தல் நடந்து 10 நாள்களுக்குப் பிறகு கீழவை உறுதிசெய்துள்ளது.
திருவாட்டி தக்காய்ச்சியின் தலைமையில், மிதவாத ஜனநாயகக் கட்சி, ஜப்பானியக் கீழவையில் மொத்தமுள்ள 465 இடங்களில் 310க்கும் மேற்பட்ட இடங்களைக் கைப்பற்றி வரலாறு படைத்துள்ளது.
நடந்துமுடிந்த நாடாளுமன்றத் தேர்தலின்படி, ஆளும் கூட்டணிக்கு 350க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைத்துள்ளன. இதற்கு முன்னர் அந்தக் கட்சிக்குக் கீழவையில் 233 இடங்களுடன் மிகக் குறுகிய பெரும்பான்மையே இருந்தது.
மிகவும் வலுவிழந்துள்ள ஜப்பானின் பொருளாதாரத்தை மீண்டும் எழச்செய்ய அவர் மீது அழுத்தம் உள்ளது. இருந்தபோதும், நாட்டின் ராணுவ பலத்தை மீட்டெடுக்க வேண்டும் என்று அவர் விரும்புவது சீனாவின் உறவை பாதிக்கும் என்பது கவனத்துக்குரியது.

