தோக்கியோ: ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபா கனடாவில் நடக்கும் ஜி-7 உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்ள ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 15) தோக்கியோவிலிருந்து புறப்பட்டார்.
ஜி-7 உச்சநிலை மாநாட்டின்போது திரு இஷிபா அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப்புடன் வரி விதிப்பு நடவடிக்கைகள் தொடர்பாகப் பேசவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதிபர் டிரம்ப்பின் வரிவிதிப்பு ஜப்பானின் வாகன உற்பத்தித் துறையை ஆட்டம் காணவைக்கும். மேலும் அது திரு இஷிபாவின் ஆட்சிக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
மாநாட்டின் போது நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை நடக்கும். அப்போது திரு இஷிபா அதிபர் டிரம்ப்புடன் பேசுவார் என்று கூறப்படுகிறது.
அண்மையில் திரு இஷிபா டிரம்ப்புடன் பேசியது குறிப்பிடத்தக்கது. மேலும் இரு நாடுகளும் வரிவிதிப்பு குறித்துத் தொடர்ந்து கலந்துரையாடல் நடத்தி வருகின்றன.
ஜப்பானியப் பிரதமர் இஷிபா, வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட 25 விழுக்காடு வரியை அகற்றுவதிலும் அடிப்படை வரியான 24 விழுக்காடு வரியை நிறுத்துவதிலும் அதிக கவனம் செலுத்துவார் என்று கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
வரி விதிப்பைக் குறைக்காமல் திரு இஷிபா நாடு திரும்பினால் அது அவருக்கும் அவரது ஆட்சிக்கும் பெரிய அடியாக அமையும் என்று கூறப்படுகிறது.