தோக்கியோ: ஜப்பானின் மேற்குப் பகுதி நகரமான நாராவில் உள்ள வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சிறைச்சாலை, சொகுசு விடுதியாக மறுவடிவமைக்கப்பட்டு வியாழக்கிழமை (ஜூன் 25) திறக்கப்பட்டுள்ளது.
அவ்விடுதியில் மொத்தம் 48 சொகுசு அறைகள் உள்ளன. அவற்றில் ஓர் அறையில் ஓர் இரவு தங்குவதற்கான குறைந்தபட்சக் கட்டணம் 147,000 ஜப்பானிய யென் (S$1,180).
கடந்த 1908ஆம் ஆண்டில் மெய்ஜி (Meiji) ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இந்தச் சிறைச்சாலை, ஜப்பானின் நவீனமயமாக்கலுக்குச் சான்றாக விளங்கும் ஐந்து முக்கியச் சிறைகளில் ஒன்றாகும். சிவப்புச் செங்கற்களால் ஆன இதன் அழகிய கட்டடக்கலை அமைப்பு காரணமாக, அது ஜப்பானின் மிக முக்கியப் பண்பாட்டுச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டுவரை இது இளையர் சீர்திருத்தப் பள்ளியாகச் செயல்பட்டு வந்தது.
இதன் வரலாற்றுப் பெருமை மாறாமல், உலகத்தரம் வாய்ந்த சொகுசு விடுதியாக மாற்றும் பணிகளை ‘ஹொஷினோ ரிசார்ட்ஸ்’ என்ற முன்னணி நிறுவனம் மேற்கொண்டது. சிறைச்சாலையின் மையப்பகுதியிலிருந்து ஐந்து கதிர்கள் போலப் பிரியும் ‘பனாப்டிகான்’ (Panopticon) என்ற தனித்துவமான சிறைக்கூட அமைப்பு அப்படியே தக்கவைக்கப்பட்டுள்ளது.
முன்னர்க் கைதிகள் அடைக்கப்பட்டிருந்த ஒன்பது சிறிய சிறை அறைகள், தற்போது நவீன வசதிகள் கொண்ட விருந்தினர் தங்கும் அறையாக மாற்றப்பட்டுள்ளன.
மேலும், சிறைக் கைதிகள் பயன்படுத்திய சில இடங்கள், பார்வையாளர்களுக்கான அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு ஜப்பானின் சிறைத்துறை வரலாற்றை விளக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.
“வரலாற்றையும் இந்த இடத்தின் மதிப்பையும் வருங்காலத் தலைமுறையினருக்குக் கடத்த விரும்புகிறோம்,” என்று ஹோட்டல் நிர்வாகம் குறிப்பிட்டது.

