ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவில் பேருந்துகளில் பயணம் செய்வோர் கூட்ட நெரிசலையும் காத்திருக்கும் நேரத்தையும் சமாளிக்கப் போராடி வருகின்றனர்.
குறிப்பாக, சுல்தான் இஸ்கந்தர் சுங்கத்துறை குடிநுழைவு, சோதனைச்சாவடியிலிருந்து (BSI) சிங்கப்பூருக்குள் வர விரும்பும் பயணிகளுக்குப் பேருந்துகளில் இடம்பிடிப்பது பெருஞ்சவாலாக உள்ளது.
சிங்கப்பூரில் வேலை பார்ப்பவர்கள் அதிகமாகப் பேருந்துகளையே விரும்புவதும் அதற்கு முக்கியக் காரணம். அதிகாலை, மாலை ஆகிய உச்ச நேரங்களில் இந்தப் பிரச்சினை அதிகம் ஏற்படுகிறது.
சில பயணிகள் இருவகை பேருந்துச் சேவைகளைப் பரிந்துரை செய்தனர். சிங்கப்பூருக்குச் செல்ல ஒன்றும், உள்ளூர் இடங்களுக்குச் செல்ல மற்றொரு வகை சேவையும் இருந்தால் கூட்டத்தையும் காத்திருப்பு நேரத்தையும் சமாளிக்கலாம் என்று அவர்கள் கருதுகின்றனர்.
நிகழ்நேரத் திரைகள் பேருந்து நிலையங்களில் வைக்கப்பட்டு, பேருந்துவரும் நேரப் பட்டியல் வழங்கப்படவேண்டும் என்பது ஒரு சிலரின் பரிந்துரை.
மேலும், உள்ளூர் ரயில் சேவைகளில் தாமதமோ, கூட்ட நெரிசலோ ஏற்படும்போது பலர் பேருந்துகளை நாடுகின்றனர்.
எடுத்துக்காட்டாக, சிரம்பான் செல்லக்கூடிய மின்சார ரயில்கள் குறிப்பிட்ட அளவே உள்ளதால் அதற்கான கட்டணச் சீட்டுகள் மிக விரைவாக விற்றுத் தீர்ந்துவிடுகின்றன. சில நேரங்களில் பயணிகள் இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக ரயில்களுக்காகக் காத்திருக்க வேண்டியுள்ளது.
ஆகவே, பலர் பேருந்துகளில் செல்ல முடிவெடுக்கின்றனர்.
தொடர்புடைய செய்திகள்
ரயில் சேவைகளை அதிகரித்து, மேம்படுத்தினால் பேருந்துப் பயணம் குறையலாம் என்று ஒருசாரார் கருதுகின்றனர்.

