ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் பாருவில் மீன்பிடித்துக்கொண்டிருந்த 26 வயது ஆடவர் ஒருவர், கடலில் விழுந்து மூழ்கினார்.
புதன்கிழமை (செப்டம்பர் 25) காலை 5.41 மணிக்கு உதவி கோரி தங்களுக்கு அழைப்பு வந்ததாக லார்கின் தீயணைப்பு, மீட்புத் துறை செயல்பாட்டுப் பிரிவுத் தலைவர் சைஃபுலிசாம் முகம்மது தெரிவித்தார்.
“அந்த ஆடவர், 10 மீட்டர் ஆழமுடைய நீரில் விழுந்தார். அவரின் உடலை மீட்க எங்கள் வீரர்களில் ஒருவர் மீட்புக் கயிற்றைப் பயன்படுத்தினார்.
“அந்த ஆடவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவக் குழு கூறியது,” என்று சைஃபுலிசாம் கூறினார்.
மீட்பு வாகனம், அவசர மருத்துவ மீட்புச் சேவை வேன், மூன்று அவசர உதவி மோட்டார்சைக்கிள் பிரிவுகளுடன் 16 அதிகாரிகளை தீயணைப்பு, மீட்புக் குழு அனுப்பியதாக அவர் சொன்னார்.
இச்சம்பவம் குறித்து காவல்துறைக்குத் தெரியப்படுத்தப்பட்டதை ஜோகூர் பாரு சவுத் பிரிவு உதவி ஆணையர் ரவுப் சலாமாட் உறுதிப்படுத்தினார். திடீர் மரணம் எனும் கோணத்தில் இச்சம்பவம் விசாரிக்கப்பட்டதாக அவர் கூறினார்.

