ஜோகூர் பாரு: உள்ளூர் வாடிக்கையாளர்களைப் புறக்கணித்து, சிங்கப்பூரர்களின் வாகனங்களை மட்டும் ஏற்கும் கார் கழுவும் கடைகளின் உரிமத்தை அதிகாரிகள் ரத்துசெய்வர் என்று ஜோகூர் பாரு மேயர் முகம்மது ஹாஃபிஸ் அகமது எச்சரித்துள்ளார்.
அந்த நகரில் உள்ள கார் கழுவும் கடை ஒன்று சிங்கப்பூர் வாகனங்களுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுப்பதாக சமூக ஊடகத்தில் பதிவு ஒன்று வெளியாகியிருந்தது. அதனைத் தொடர்ந்து மாநில அரசாங்கம் வெளியிட்ட ஆணையைத் தொடர்ந்து, அவரின் கருத்து வந்துள்ளது.
ஜோகூர் பாரு நகர மன்றக் கூட்டத்திற்குத் தலைமைதாங்கிய பிறகு திரு ஹாஃபிஸ் செய்தியாளர்களிடம் பேசினார்.
கார் கழுவும் கடைகள் தொடர்பான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படும் என்று கூறிய அவர், இதுவரை அதிகாரபூர்வ புகார் எதுவும் விடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்தார்.
‘‘இந்த விவகாரத்தை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து சோதனைகள் நடத்துவோம்,’’ என்றார் அவர்.

