ரோம்: சில இத்தாலிய விமான நிலையங்களில் வரும் நாள்களில் விமானங்களுக்கு எரிபொருள் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
மத்திய கிழக்குப் பூசல் முடிவுக்கு வரும் அறிகுறிகள் அதிகம் தென்படாத நிலையில் இத்தாலியில் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பொலோன்யா, மிலான் லினாட்டே, டிரெவிசோ, வெனிஸ் ஆகிய விமான நிலையங்களில் விமான எரிபொருள் கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
இந்தக் கட்டுப்பாடுகள் இம்மாதம் இரண்டாம் தேதியிலிருந்து ஒன்பதாம் தேதி வரை நீடிக்கும்.
கட்டுப்பாட்டைத் தெரிவிக்கும் ஆலோசனை அறிக்கை, சம்பந்தப்பட்ட விமான நிலையங்களுக்கு அனுப்பப்பட்டது. ‘ஏர் பிபி இத்தாலியாஸ் பியுவெல் ஜெட் ஏ1’ (Air BP Italia’s fuel jet A1) எரிபொருளின் அளவு குறைவாக இருப்பதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய கிழக்குப் பூசல் காரணமாகப் பல்வேறு நாடுகள் எரிபொருள் தட்டுப்பாட்டை எதிர்நோக்குகின்றன. இப்போது ஐரோப்பாவிலும் தாக்கம் உணரப்பட்டுள்ளதை இத்தாலியில் எடுக்கப்படும் இந்நடவடிக்கை எடுத்துக்காட்டுவதாகக் கூறப்படுகிறது.
போர் தொடங்கியதிலிருந்து ஹோர்முஸ் நீரிணை கிட்டத்தட்ட முழுமையாக மூடப்பட்டுள்ளது. அதன் காரணமாக கச்சா எண்ணெய், எரிவாயு, விமான எரிபொருள் போன்றவற்றை உலக நாடுகளுக்குக் கொண்டு சேர்ப்பதில் இடையூறுகள் ஏற்பட்டுள்ளன.
பாரசீக வளைகுடாவிலிருந்து ஆக அதிக அளவில் விமான எரிபொருளை இறக்குமதி செய்யும் வட்டாரம் ஐரோப்பாவாகும்.

