லாஸ் ஏஞ்சலிஸ்: ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட கலிஃபோர்னிய ஆடவருக்கு US$18.8 மில்லியன் (S$25 மில்லியன்) இழப்பீடு தர வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
குழந்தைகளுக்கான அதன் நறுமணப்பொடியைப் பயன்படுத்தியதால் புற்றுநோய் ஏற்பட்டதாகத் திரு இமோரி ஹெர்னாண்டஸ் வாலடெஸ் கூறினார்.
அமெரிக்க நீதிமன்றத்தில், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் அதன் நறுமணப்பொடியைப் கொண்ட பொருள்களின் தொடர்பில் இதுபோன்ற ஆயிரக்கணக்கான வழக்குகளை எதிர்நோக்குகிறது.
திரு வாலடேஸ் சென்ற ஆண்டு கலிஃபோர்னியா நீதிமன்றத்தில் இழப்பீடு கோரி வழக்கு தொடுத்திருந்தார்.
குழந்தைப் பருவத்திலிருந்தே அந்நிறுவனத்தின் நறுமணத்தூளைப் அதிகம் பயன்படுத்தி வந்ததால், தம்முடைய இதயத்தைச் சுற்றிய திசுக்களில் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய ‘மிசோத்திலியோமா’ எனும் புற்றுநோய் ஏற்பட்டதாக 24 வயதான அவர் குறிப்பிட்டார்.
திரு வாலடெசின் மருத்துவக் கட்டணங்களுக்கும் அவர் பட்ட துன்பத்திற்கும் அவருக்கு இழப்பீடு வழங்கப்படவேண்டும் என்று நீதிபதிகள் குழு முடிவெடுத்தது.
இந்நிலையில், ஜான்சன் & ஜான்சன் நிறுவனம் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாகத் தெரிவித்துள்ளது.

