ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலம் 2025ஆம் ஆண்டில் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகளை வாரயிறுதி நாள்களாகக் கடைப்பிடிக்க முடிவு செய்துள்ளது.
இதைத் தொடர்ந்து ஜோகூர் பாருவில் உள்ள வர்த்தகங்கள் மக்கள் வெள்ளத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர். அதற்கேற்றவாறு கூட்டத்தைச் சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் எடுப்பது குறித்து சிந்தித்து வருகின்றனர்.
சிங்கப்பூரிலும் சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமைகள் வாரயிறுதி நாள்களாக உள்ளதால், அந்நாள்களில் சிங்கப்பூரிலிருந்து அதிகப் பயணிகள் ஜோகூர் பாருவுக்கு வருகை தருவர் என்ற எதிர்பார்ப்பில் அங்குள்ள வர்த்தகங்கள் உள்ளன.
இதன் தொடர்பில் கருத்துரைத்த ஜோகூர் பாருவில் உள்ள காப்பி, உணவக, மதுபானக்கூட நடத்துநர்கள் சங்கத் தலைவர் வீ லியாங் சாட், அதிக வருகையாளர்கள் வரவை எதிர்பார்த்து சில வர்த்தகங்கள் கூடுதல் ஊழியர்களை தயார்நிலையில் வைத்திருக்கக்கூடும் என்றார்.
“இப்பொழுதே அது சனிக்கிழமைகளில் தெரிகிறது. இதை வைத்துத்தான் எதிர்வரும் 2025ஆம் ஆண்டின் வாரயிறுதி நாள்களில் அதிகமான வருகையாளர்களை எதிர்பார்க்கிறோம்.
“இதன் காரணமாக, சில வர்த்தகங்கள் கூடுதல் ஊழியர்களை தயாராக வைத்திருக்க முற்படுவர். வேறு சில வர்த்தகங்கள் மாற்றம் வந்தபின் முடிவு செய்யலாம் எனக் காத்திருக்கக்கூடும்,” என்றார்.