ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் பாரு பகுதியில் டெஸ்லா நிறுவனம் தனது முதல் மின்னூட்டு நிலையத்தை அமைத்துள்ளது.
அந்நிலையத்தை ஜோகூர் மாநில முதலமைச்சர் ஒன் ஹஃபிஸ் காஸி வியாழக்கிழமைத் திறந்துவைத்தார்.
அதிக மின்னூட்டு நிலையங்களை அமைக்க மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனங்களுக்கு உதவ ஜோகூர் தயாராக இருப்பதாக அந்நிலையத்தின் திறப்புவிழாவின்போது ஜோகூர் மாநில செயற்குழு உறுப்பினரான லீ டிங் ஹான் கூறினார்.
“கோலாலம்பூரில் டெஸ்லா நிறுவனம் தனது முதல் மின்னூட்டு நிலையத்தை அமைத்ததற்குப் பிறகு ஜோகூரைத் தனது இரண்டாவது மின்னூட்டு நிலையம் அமைப்பதற்குத் தேர்ந்தெடுத்ததில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்,” என அவர் தெரிவித்தார்.
கோலாலம்பூருக்கு அடுத்தபடியாக ஜோகூரில் டெஸ்லா வாகனத்தைப் பயன்படுத்துவோர் அதிகம் இருப்பதாக தரவுகள் தெரிவித்ததால் அதன் அடிப்படையில் டெஸ்லா நிறுவனம் தனது இரண்டாவது மின்னூட்டு நிலையத்தை ஜோகூரில் அமைத்ததாகத் தெரிவித்தது.

