ஜோகூர் பாரு: ஜோகூரில் வேலைசெய்யும் வெளிநாட்டு ஊழியர்களை இரண்டு மாதங்களுக்குள் மையப்படுத்தப்பட்ட ஊழியர் தங்குவிடுதிகளுக்கு (சிஎல்கியூ) மாற்ற வேண்டும் என கட்டுமான நிறுவனங்கள், ஒப்பந்ததாரர்கள், உற்பத்தித்துறை நிறுவனங்களுக்கு ஜோகூர் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளில் வெளிநாட்டு ஊழியர்களைத் தங்க வைப்பது தொடர்பில் வந்த புகார்களை அடுத்து, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மாநில இளையர், விளையாட்டு, தொழில்முனைவர் மேம்பாட்டு, கூட்டுறவு, மனிதவளக் குழுவின் தலைவர் முகம்மது ஹைரி மட் ஷா தெரிவித்தார்.
“பொது வீடமைப்புப் பகுதிகளில் வெளிநாட்டு ஊழியர்களைத் தங்கவைப்பது குறித்தும் அதனால் எழும் தொல்லைகள் குறித்தும் அடிக்கடி புகார்கள் வருகின்றன. இது கடுமையான விவகாரம் என்பதால் இதனைக் கையாள்வதில் ஜோகூர் அரசு எந்த சமரசத்திற்கும் இடமளிக்காது.
“வெளிநாட்டு ஊழியர் தங்குமிடப் பிரச்சினை, அடக்குமுறை அல்லது கட்டாய வேலைக்குத் தள்ளிவிடும் எந்தவொரு விஷயத்திலும் ஜோகூர் சிக்குவதை நான் விரும்பவில்லை. அது மாநிலத்தின், ஏன் ஒட்டுமொத்த மலேசியாவின் நற்பெயருக்கே களங்கம் ஏற்படுத்திவிடும். மேலும், அது மறைமுகமாக, ஜோகூரில் முதலீடு செய்ய விரும்பும் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடமும் நம்பிக்கைக் குறைவை ஏற்படுத்திவிடலாம்,” என்றார் திரு முகம்மது ஹைரி.
அத்துடன், பொது வீடமைப்புப் பகுதிகளில் எந்தவொரு வெளிநாட்டு ஊழியரும் தங்கியிருக்கவில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில், இவ்வாண்டு மே மாதம் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ளூர் அதிகாரிகள், ஜோகூர் தொழிலாளர் துறையுடன் இணைந்து சோதனை நடத்துவர் என்றும் அவர் சொன்னார்.