ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் தண்ணீர் இல்லாமல் பொதுமக்கள் இரண்டு நாள்களுக்கு மேலாகத் தவித்து வருகின்றனர்.
இதனால், ஜோகூர்வாசிகள் பெட்ரோல் நிலையங்களில் உள்ள கழிவறைகளைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
சிலர் வேறு வழி இல்லாமல் கடைகளிலிருந்து தண்ணீர்ப் புட்டிகளை வாங்கி அத்தியாவசியத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருகின்றனர்.
ஜோகூரில் மே 20ஆம் தேதி கனத்த மழை பெய்தது. இதனால் தண்ணீர் எடுத்துச் செல்லும் குழாய்களுக்கான ஆறு இயந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது.இதனால் தண்ணீர் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
மே 21ஆம் தேதி காலை 10 மணிமுதல் தண்ணீர் விநியோகம் தடைபட்டது. இதனால் 300,000க்கும் அதிகமான ஜோகூர் பாரு மக்கள் பாதிக்கப்பட்டதாக ‘த ஸ்டார்’ ஊடகம் தெரிவித்துள்ளது.
நிலைமை விரைவில் சரியாகும் என்றும் தண்ணீர் விநியோக நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை (மே 21) அன்றே குழாய்கள் சரிசெய்யப்பட்டிருக்க வேண்டும், ஆனால் பிரச்சினை இன்னும் நீடிப்பதாக அதிகாரிகள் கூறினர்.
பாதிக்கப்பட்ட இடங்களில் வசிக்கும் மக்களுக்குப் பெரிய வாகனங்களில் நீர் எடுத்துச் சென்று விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் சில இடங்களில் தண்ணீர்ப் புட்டிகளும் வழங்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
தொடர்புடைய செய்திகள்
இந்நிலையில், குழாய்கள் கட்டங்கட்டமாகச் சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் தற்போது கிட்டத்தட்ட 60 விழுக்காடு தண்ணீர் விநியோகம் சீர் செய்யப்பட்டுவிட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.