ஜோகூர் பாரு: அண்மையில் சிங்கப்பூர்ப் பதிவெண் கொண்ட ஒரு காரில் ‘காரின் கண்ணாடியை மீண்டும் உடைக்க வேண்டாம், ஏற்கெனவே அது உடைக்கப்பட்டுள்ளது. திருடுவதற்கு ஒன்றுமில்லை’ என்ற வாசகம் ஒட்டப்பட்டிருந்தது.
அது தொடர்பாக மே 5ஆம் தேதி ‘எஸ்ஜி கேபோ’ என்ற ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றும் இடம்பெற்றது. அந்தப் பதிவு பலரது கவனத்தை ஈர்த்தது.
அது ஜோகூர் பாரு காவல்துறை கண்ணிலும் பட்டது.
“அந்தப் பதிவு மோசமான ரசனையைக் கொண்டுள்ளது. மேலும் இது உண்மைக்கு நெருக்கமாகவும் இல்லை. இது ஒரு குறும்புத்தனமான பதிவு,” என்று ஜோகூர் பாரு காவல்துறை அதிருப்தி தெரிவித்தது.
“அதிகாரிகள் உள்ளூர்வாசிகளுக்கு மட்டுமல்லாது, மலேசியாவுக்கு வரும் சிங்கப்பூரர்களின் பாதுகாப்பையும் கருத்தில் கொண்டுதான் செயல்படுகிறது,” என்று ஜோகூர் பாரு தென்மாவட்டக் காவல்துறை குறிப்பிட்டது.
“நாள் ஒன்றுக்கு சராசரியாக சிங்கப்பூர்ப் பதிவெண் கொண்ட 250,000 கார்கள் ஜோகூருக்குள் வருகின்றன. இந்த கார்கள் அனைத்கின் கண்ணாடிகளும் தாக்கப்பட்டிருந்தால் காவல் நிலையத்தில் மக்கள் வரிசை பிடித்து புகார் தந்திருப்பார்கள்,” என்று காவல்துறை கூறியது.
“சிறிய அளவில் கார் திருட்டுகள் நடக்கின்றன. அவை சிங்கப்பூர் கார்களை மட்டும் குறிவைத்து நடப்பதில்லை. மலேசிய கார்களிலும் இம்மாதிரியான சம்பவங்கள் நடக்கின்றன,” என்று அது தெரிவித்தது.