ஜோகூர் பாரு: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் பதிவான டெங்கிச் சம்பவங்களின் எண்ணிக்கை அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய வாரத்தில் 7,994ஆக இருந்தது.
சென்ற ஆண்டு அதே காலகட்டத்தில் 2,518 டெங்கிச் சம்பவங்கள் பதிவாயின. இதனால் 218% அதிகரிப்பு ஏற்பட்டிருப்பதாக மாநில, மத்திய சுகாதாரக் குழுவின் தலைவர் லிங் டியான் சூன் கூறினார்.
இருப்பினும், செப்டம்பர் கடைசி வாரத்தைக் காட்டிலும் அக்டோபர் 1ஆம் தேதி தொடங்கிய வாரத்தில் டெங்கி பாதிப்பு குறைந்துள்ளது. சென்ற மாதத்தின் இறுதி வாரத்தில் புதிதாக 233 பேரை டெங்கி தொற்றிய நிலையில், இம்மாத முதல் வாரத்தில் அந்த எண்ணிக்கை 218ஆக குறைந்தது என்று திரு லிங் குறிப்பிட்டார்.
ஜோகூர் பாரு வட்டாரத்தில் ஆக அதிகமானோருக்கு டெங்கிக் காய்ச்சல் ஏற்பட்டதாக அவர் கூறினார். அங்கு 163 பேர் டெங்கியால் பாதிக்கப்பட்டனர்.
அதற்கு அடுத்தபடியாக கூலாயில் 24 பேருக்கும், பத்து பகாட்டில் 7 பேருக்கும் டெங்கி ஏற்பட்டதாக அவர் தெரிவித்தார்.
இவ்வாண்டு, 40 வாரக் காலகட்டத்தில் 15 பேர் டெங்கிக் காய்ச்சலால் மாண்டதாகத் திரு லிங் கூறினார். சென்ற ஆண்டு அதே காலகட்டத்தில் ஒருவர் உயிரிழந்ததாக அவர் சொன்னார்.

