ஜோகூர்: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் சொத்துகள் வாங்குவது தொடர்பாகத் திட்டமிடும் வெளிநாட்டினர்களின் எண்ணிக்கை கூடிய விரைவில் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலத்துக்கான ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதும் ஜோகூரில் சொத்துகள் வாங்குவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம், 2023ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டதை அடுத்து, ஜோகூரில் உள்ள சொத்துகளின் திசையில் வெளிநாட்டினர் பலரின் கவனம் திரும்பியிருப்பதாக ஜோகூர் சொத்து, வீடமைப்பு மேம்பாட்டாளர்கள் சங்கத்தின் தலைவர் லிண்டி டான் தெரிவித்தார்.
“ஜோகூரில் உள்ள சொத்துகள் வாங்க முன்வருவோரின் எண்ணிக்கை மீட்சி அடைந்திருப்பது மட்டுமின்றி, கொவிட்-19 நெருக்கடிநிலைக்கு முன்பு இருந்த நிலையைவிட அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டிலிருந்து ஜோகூரில் சொத்துகள் வாங்குவோர் பேரளவில் ஏற்றம் கண்டுள்ளது. குறிப்பாக, ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் மண்டலம் அறிவிக்கப்பட்டதை அடுத்து இந்நிலை ஏற்பட்டுள்ளது.
“இந்த உடன்படிக்கை இவ்வாண்டு கையெழுத்திடப்படும் என்று நம்பப்படுகிறது. ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டதும் மேலும் பலர் ஜோகூரில் சொத்துகளை வாங்குவர் என நம்புகிறோம்,” என்றார் திருவாட்டி டான்.
தற்போது ஜோகூரில் வீடு வாங்குபவர்களில் பெரும்பாலானோர் மலேசியர்கள் என்றும் சிங்கப்பூரில் வேலை செய்பவர்களும் அவர்களில் அடங்குவர் என்றும் அவர் தெரிவித்தார்.