கோலாலம்பூர்: ஜோகூர் மாநிலத்தின் வளர்ச்சி மற்றும் பொதுநலனைப் பாதிக்கும் அழுத்தமான பிரச்சினைகளைத் தீர்க்க, மத்திய அரசுடன் நெருக்கமாகவும் ஆக்கபூர்வமாகவும் பணியாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை மாநில அரசு மீண்டும் வலியுறுத்தியுள்ளது என்று ஜோகூர் மாநில முதலமைச்சர் ஒன் ஹஃபீஸ் காஸி வியாழக்கிழமை (நவம்பர் 13) தெரிவித்துள்ளார்.
ஜோகூர் பாருவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான விரைவுப் போக்குவரத்து ரயில் (ஆர்டிஎஸ்) இணைப்பு செயல்படத் தொடங்கியவுடன் எதிர்பார்க்கப்படும் போக்குவரத்து நெரிசல் குறித்து ஜோகூர் ஆட்சியாளர் இஸ்மாயில் முன்னதாக கவலை தெரிவித்ததைத் தொடர்ந்து திரு ஒன் ஹஃபீஸ் கருத்துரைத்துள்ளார்.
பினாங்கு மாநிலம் அதிக விலையுயர்ந்த எல்ஆர்டி திட்டத்தைப் பெற்றபோதிலும், ஜோகூரின் புக்கிட் சாகர் பகுதியைச் சுற்றி முழுமையான தலைக்கு மேலான போக்குவரத்து அமைப்பு அல்லது மாற்றுப் போக்குவரத்துத் தெரிவுகள் செயல்படுத்தப்படுமா என்பது குறித்து இன்னும் எந்த முடிவும் அறிவிக்கப்படவில்லை என்று திரு இஸ்மாயில் தெரிவித்திருந்தார்.
ஜோகூர் மாநில அரசாங்கம் ஆட்சியாளரின் கவலைகளை ஒப்புக்கொள்வதாகவும், சிறந்த தீர்வுகளைக் கண்டறிய மத்திய அரசு அதிகாரிகளுடன் ஒத்துழைப்பதில் உறுதியாக இருப்பதாகவும் திரு ஒன் ஹஃபீஸ் கூறினார்.
மலேசியாவின் முக்கிய நுழைவாயிலாகவும் தேசிய பொருளியலுக்கு முக்கியப் பங்களிப்பு வழங்கி வரும் ஜோகூரின் உத்திபூர்வ முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.
“ஒருமித்த கருத்துடன், நாட்டின் முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதிலும் வளர்ச்சியின் நன்மைகள் அனைத்துக் குடிமக்களாலும் நியாயமாகவும் பரவலாகவும் உணரப்படுவதை உறுதிசெய்வதிலும் ஜோகூர் தொடர்ந்து முக்கியப் பங்கு வகிக்கும்,” என்றும் ஜோகூர் முதலமைச்சர் கூறினார்.
“அனைத்து விவகாரங்களும் எளிதாக்கப்பட, உத்திபூர்வத் திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு விஷயங்களில் மத்திய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற ஜோகூர் மாநிலம் உறுதியுடன் இருக்கிறது,” என்றும் திரு ஒன் ஹஃபீஸ் வலியுறுத்தினார்.
தொடர்புடைய செய்திகள்
முன்னதாக, ஜோகூரில் உள்ள முக்கியச் சுகாதாரப் பராமரிப்புத் திட்டங்களில் ஏற்படும் தாமதங்கள், பாசிர் கூடாங் மருத்துவமனையின் நிறைவு, சுல்தானா அமினா மருத்துவமனையின் தற்போதைய சிக்கல்கள் மற்றும் சுல்தானா அமினா மருத்துவமனை இரண்டாம் திட்டத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகள் குறித்து திரு இஸ்மாயில் கவலை தெரிவித்தார்.

