ஜோகூர் பாரு: மலேசியக் கிண்ண காற்பந்துப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் ஜோகூர் டாருல் தாஜிம் (ஜெடிடி) குழு கூச்சிங் சிட்டி குழுவை 2-0 என்ற கோல் எண்ணிக்கையில் சனிக்கிழமை (மே 23) வென்றது.
அந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாக திங்கட்கிழமை (மே 25) அம்மாநிலத்தில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனை ஜோகூர் மாநில முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி, ஜோகூர் மாநில ஆட்சியாளர் இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமின் ஒப்புதலோடு வெளியிட்டார்.
ஆட்டம் மலேசியத் தலைநகர் கோலாலம்பூருக்கு அருகில் உள்ள புக்கிட் ஜலில் அரங்கத்தில் 50,000க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் முன்னிலையில் நடந்தது.
விறுவிறுப்பாக நடந்த இறுதி ஆட்டத்தை வென்றுள்ள ஜோகூர் ஜெடிடி அணி, நான்காவது முறையாக தொடர் வெற்றியை அடைந்து மலேசியக் கிண்ண காற்பந்துப் போட்டிகளில் சாதனை படைத்துள்ளது.
ஆதரவாளர்களுக்கு நன்றி
‘சௌதர்ன் டைகர்ஸ்’ என்ற புனைப்பெயரில் அழைக்கப்படும் ஜெடிடி குழுவுக்கு நல்லாதரவு வழங்கிவந்த ஜோகூர் காற்பந்து ரசிகர்களுக்கு நன்றி கூறும் வகையில் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டதாக முதல்வர் ஒன் ஹஃபிஸ் குறிப்பிட்டார்.

