ஜோகூரில் இயங்கும் அரசு சாரா அமைப்பு (என்ஜிஓ) குற்றக் கும்பல்கள் மின்சிகரெட்டுகளை சிங்கப்பூருக்குள் கடத்த உள்ளூர் இளையர்களை பயன்படுத்துகின்றன என்று எச்சரித்துள்ளது.
சிங்கப்பூர் விபத்து உதவி நிலையம் (Singapore Accident Help Centre) என்று அறியப்படும் அந்த அமைப்பு, 2024 அக்டோபர் முதல் 2025 ஜுலை வரையில் அது போன்ற 77 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்று குறிப்பிட்டுள்ளது.
சாதாரணமான (சட்டவிரோதமற்ற) பொருள்களை அக்கரைக்கு விநியோகம் செய்வதுபோல் இளையர்கள் நினைத்துக்கொண்டு, உடனடி ரொக்கம் கிடைப்பதால் அவர்கள் இக்குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர்.
வேலையில்லாத பலர் இந்தச் செயல்களில் அடிக்கடி ஈர்க்கப்படுகின்றனர். அவர்களைக் கவர்வதும் குற்றக் கும்பல்களுக்கு எளிதாக அமைகிறது. ஜோகூரிலிருந்து மின்சிகரெட்டுகளை சிங்கப்பூருக்குள் கடத்தும் கும்பல்கள் பல்வேறு வழிவகைகளைக் கையாள்கின்றன.
தடை செய்யப்பட்டப் பொருள்களை கார்கள், வேன்கள், பேருந்துகள், கனரக வாகனங்கள், மோட்டார்சைக்கிள்கள் போன்றவற்றில் மறைப்பது அவற்றில் ஒருவகை. இரு நிலச் சோதனைச் சாவடிகளிலும் சிங்கப்பூரின் அரசாங்க அமைப்புகள், ஜுன், ஜுலை மாதங்களில் மட்டும் 15,000 மின்சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளன.
ஜோகூர் அதிகாரிகளும் கப்பல்களை வழிமறித்து மின்சிகரெட் கடத்தல்களை தடுத்துள்ளனர். ஆகஸ்ட் 7 அன்று துவாஸ் அருகிலுள்ள சுல்தான் அபு பக்கர் நிலச் சோதனைச்சாவடியில் 7,600 மின்சிகரெட்டுகள் ஒரு லாரியில் கண்டுபிடிக்கப்பட்டன.
சமூகச் சேவையாளரான ஃபாரிசாதுல் ஃபிர்தாவுஸ், அண்மையில் 20 வயதே ஆன இரண்டு வேலையில்லாத இளையர்கள், 1000 ரிங்கெட் பெறுவதற்காக சிங்கப்பூருக்குள் வெற்றிலைப் பெட்டிகளை எடுத்து வந்த சம்பவத்தைப் பற்றி விளக்கினார்.
ஒருமுறை அவர்கள் வெற்றிகரமாகச் சிங்கப்பூருக்குள் நுழைந்து பெட்டிகளை விநியோகித்துவிட்டனர். ஆனால் இரண்டாம் முறை அவர்களை உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் அதிகாரிகள் தடுத்துவிட்டனர். காரணம் அவர்கள் கொண்டுவந்த ‘வெற்றிலைப் பெட்டியில்’ 300 மின்சிகரெட்டுகள் இருந்துள்ளன. அவர்களின் கடப்பிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை தொடர்கிறது.