புதுடெல்லி: டெல்லியில் போக்குவரத்து அமைச்சராக உள்ள கைலாஷ் கெலாட் தமது பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மேலும், அவர் ஆம்ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாகத் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் ஆம்ஆத்மியின் ஆட்சி நடக்கும் நிலையில், ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 17) தாம் அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதாக கைலாஷ் கெலாட் அறிவித்தார்.
இதனால் ஆம்ஆத்மி கட்சி தலைமை அதிர்ச்சி அடைந்துள்ளது
ஆம்ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் டெல்லி முதல்வரும், கல்வித்துறை அமைச்சருமான அதிஷி ஆகியோருக்கு தமது பதவி விலகல் கடிதத்தை கைலாஷ் கெலாட் அனுப்பி உள்ளார்.
“டெல்லி மக்களுக்கு அளித்த முக்கிய வாக்குறுதிகளை ஆம்ஆத்மி கட்சியால் நிறைவேற்ற முடியாதது அதிருப்தி அளிக்கிறது. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள் காரணமாக பதவி விலகுகிறேன்.
“யமுனை நதியைச் சுத்தப்படுத்த தவறிவிட்டோம். மக்களுக்கு ஒரு தூய்மையான யமுனை நதியை உருவாக்குவோம் என தேர்தல் வாக்குறுதியில் உறுதியளித்தோம். ஆனால், அந்த உறுதிமொழியை நிறைவேற்றத் தவறிவிட்டோம்,” என்று கடிதத்தில் கைலாஷ் கெலாட் குறிப்பிட்டார்.
இந்நிலையில், கைலாஷ் கெலாட் விரைவில் பாஜகவில் இணைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

