சார்லட்: அண்மையில் அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலங்களை ‘ஹெலன்’ புயல் உலுக்கியது.
இதில் 200க்கும் மேற்பட்டோர் மாண்டனர்.
பலர் காயமடைந்தனர்.
வீடுகள் சேதமடைந்ததுடன் பல மரங்கள் வேரோடு சாய்ந்தன.
இந்நிலையில், புயலால் பேரளவில் பாதிக்கப்பட்ட வடகெரோலைனாவுக்கு அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் அக்டோபர் 5ஆம் தேதியன்று பயணம் மேற்கொண்டார்.
அங்கு நிவாரணப் பணி அதிகாரிகளையும் தொண்டூழியர்களையும் அவர் சந்தித்துப் பேசினார்.
பாதிக்கப்பட்டோருக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களைப் பொட்டலம் கட்ட அவர் உதவினார்.
பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு 100 மில்லியன் அமெரிக்க டாலர் (S$130 மில்லியன்) ஒதுக்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார்.
புயல் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு உதவி செய்து வரும் அதிகாரிகளையும் தொண்டூழியர்களையும் திருவாட்டி கமலா வெகுவாகப் பாராட்டினார்.

