குச்சிங்: 70 வயது ஆடவரை மாது ஒருவர் கம்பால் அடிப்பதைக் காட்டும் காணொளிகள், மலேசியாவின் கெடா மாநிலத்தில் உள்ள சமூகநல இல்லம் ஒன்றில் எடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
இருப்பினும், இந்தச் சமூகநல இல்லம் நாட்டின் சமூகநலத் துறையுடன் பதிவுசெய்யப்படவில்லை என்று மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சர் நேன்சி ஷுக்ரி தெரிவித்துள்ளார்.
காணொளிகளில் முதியவரைத் தாக்கும் மாது, அந்தச் சமூகநல இல்லப் பணியாளர் என்று கூறப்படுகிறது.
காணொளிகள் பரவலாகப் பகிரப்பட்டதை அடுத்து முதியவர்களுக்கான அந்தத் தனியார் பராமரிப்பு இல்லத்துக்கு எதிராகச் சமூகநலத் துறையும் காவல்துறையும் விசாரணை மேற்கொண்டதாக திருவாட்டி நேன்சி கூறினார்.
விசாரணை முடிவடைந்ததும் சமூகநல இல்லத்தை மூட உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றார் அவர்.
இதற்கிடையே, முதியவர்களுக்குப் பராமரிப்பு வழங்குவோர் தங்களின் பொறுப்புகளை ஒழுங்காகச் செய்யுமாறு திருவாட்டி நேன்சி அறிவுறுத்தியுள்ளார்.
சமூகநல இல்லத்தின் உரிமையாளரான 44 வயது ஆடவர், இல்லத்தில் உதவியாளரான 36 வயது மாது ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்கள் விசாரணையில் உதவி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.