அமெரிக்காவின் ஆக்லஹோமா மாநிலத்தில் நூற்றுக்கும் அதிகமான தேனீக்கள் 81வயது ஆடவரை கிட்டத்தட்ட மூன்று மணிநேரம் தாக்கியுள்ளன.
ஆடவரின் உடலில் இருந்த இருநூற்றுக்கும் அதிகமான தேனீக்கொடுக்குகளை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
மே 26ஆம் தேதி கார்லஸ் ஆமோஸ் என்ற ஆடவர் தமது வீட்டு புல்வெளியில் புற்களை வெட்டிக்கொண்டிருந்தார்.
அப்போது சில தேனீக்கள் சுற்றிவருவதைக் கண்ட அவர் உடனடியாக வீட்டிற்குள் சென்று பூச்சிக்கடியில் இருந்து தப்பிக்கும் கலவையை எடுத்து வந்தார்.
தமது உடலில் அதைப் பூசுவதற்குள் நூற்றுக்கும் அதிகமான தேனீக்கள் அவரைக் கொட்டத் தொடங்கின.
தேனீக்களிடம் இருந்து தப்பிக்க கார்லஸ் ஓடத் தொடங்கினார், ஆனால் அவர் தடுக்கி கீழே விழுந்து இடுப்பில் முறிவு ஏற்பட்டது.
புல்வெளியில் நகர முடியாமல் தவித்த அவர் கிட்டத்தட்ட 3 மணி நேரம் தேனீகளிடம் போராடினார்.
கண்கள், காதுகள், மூக்கு ஆகியவற்றை மூடிக்கொண்ட அவர், தாம் வலியால் துடிதுடித்துப்போனதாகக் கூறினார்.
வழிப்போக்கர் கார்லஸ் துடிப்பதைக் கண்டு அதிகாரிகளை உதவிக்கு அழைத்தார்.
தம்மை தாக்கியது ஆப்பிரிக்க தேனீக்களான கில்லர் பீ என்று அவர் கூறினார்.
தற்போது கார்லஸ் கொஞ்சம் கொஞ்சமாக உடல்நலம் தேறிவருவதாக அவரது மகள் தெரிவித்தார்.