பியோங்யாங்: வடகொரியா அடுத்த ஐந்தாண்டுகளில் பொருளியல் தரத்தை வலிமைப்படுத்தி அதை மேம்படுத்தும் என்று அதன் தலைவர் கிம் ஜோங் உன் கூறியிருக்கிறார்.
வடகொரியா, கடந்த வாரத்திலிருந்து பாட்டாளிக் கட்சியின் ஒன்பதாவது காங்கிரஸ் கூட்டத்தை நடத்தி வருகிறது. அந்தக் கூட்டத்தில் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான முக்கியக் கொள்கை இலக்குகள் நிர்ணயிக்கப்படும்.
திங்கட்கிழமை (பிப்ரவரி 23) தொடர்ந்த காங்கிரஸ் கூட்டத்தில், உறுப்பினர்கள் அடுத்த ஐந்தாண்டுகளுக்கான திட்டங்களையும் இலக்குகளையும் வகுக்கத் தொடங்கினர். அவற்றில் ராணுவம், வெளிநாட்டுக் கொள்கை, தொழில்துறை, வேளாண்மை உள்ளிட்டவை அடங்கும் என்று கேசிஎன்ஏ செய்தி நிறுவனம் தெரிவித்தது.
அடுத்த ஐந்தாண்டுகளை முழு அளவிலான வளர்ச்சிக் கட்டம் என்று குறிப்பிட்ட திரு கிம், காலப்போக்கில் புதிய திட்டங்கள் நன்கு நிர்வகிக்கப்படுவதற்கு எண்ணங்கள், தொழில்நுட்பம், கலாசாரம் ஆகியவற்றில் மாற்றங்களைக் கொண்டுவருமாறு கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில், ஆளுங்கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் பதவியேற்றுக்கொண்டதன் தொடர்பில், திரு கிம்முக்கு சீன அதிபர் ஸி ஜின்பிங் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டதாக கேசிஎன்ஏ கூறியது.
இதற்கிடையே, திரு கிம்மின் சகோதரி கிம் யோ ஜொங்கிற்குப் பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
திருவாட்டி கிம் யோ ஜொங், கட்சியின் துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளதாக கேசிஎன்ஏ தெரிவித்தது. முன்னதாக, அவர் துணை இயக்குநராக இருந்தார்.

