மலேசியாவில் புதன்கிழமை (ஜனவரி 29ஆம் தேதி) இரு கார்கள் இரவு விடுதி ஒன்றின் வெளியே வேகமாக வந்து பொதுமக்களை மோதித் தள்ளிய சம்பவம் குறித்து அந்நாட்டுக் காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பான காணொளி ஒன்று இணையத்தில் பரவியதை அடுத்து மலேசியக் காவல்துறை விசாரணையைத் தொடங்கியது.
இது குறித்து மலேசியக் காவல்துறை வெளியிட்ட ஊடக அறிக்கையில் பிரிக்ஃபீல்ட்ஸ் காவல்துறை துணை காவல்துறை ஆணையர் மஷரிமான் முகம்மது சம்பவத்தை உறுதிசெய்தார். இதில் சம்பவத்தை நேரில் பார்த்த 24 வயது நபர் புகார் அளித்திருப்பதாக அவர் தெரிவித்தார்.
புகாரில், இரண்டு கார்கள், ஒன்று டொயோட்டா ஹிலக்ஸ் பிக்கப் வாகனம், மற்றொன்று டொயோட்டா வியோஸ் ரக கார், இரண்டும் வாகன நிறுத்துமிடம் ஒன்றிலிருந்து வெளியேறி பின்னர் தாறுமாறாக ‘டாப் பிளஸ்’ என்ற இரவு விடுதிக்கு வெளியே கூடியிருந்தவர்களை நோக்கி வேகமாகச் செலுத்தப்பட்டதாக சம்பவத்தை நேரில் பார்த்தவர் விவரித்துள்ளார்.
இந்தச் சம்பவத்தில் குறைந்தது இருவர் காயமுற்றதாகத் துணை ஆணையர் மஷரிமான் தெரிவித்தார். இவர்களில் ஒருவர் மருத்துவ அவசர வாகனம் மூலம் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதாக அவர் விளக்கினார்.
அவருக்கு ஏற்பட்டுள்ள காயங்கள் எவ்வளவு கடுமையானவை என்பது தெரியவில்லை என்று கூறப்படுகிறது.
சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் தருமாறு காவல்துறையினர் அழைப்பு விடுத்துள்ளனர்.