கோலாலம்பூர்: மலேசியாவின் மனிதவள அமைச்சர் ரமணன், சிங்கப்பூருக்கு வேலைக்கு வரும் மலேசியர்களின் நலனில் கவனம் செலுத்த உத்தரவிட்டுள்ளார்.
சமூகப் பாதுகாப்பு ஆணையம் (Socso) அதன் பாதுகாப்புத் திட்டங்களைச் சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லும் தனது குடிமக்களுக்கும் வழங்க வேண்டும் என்று திரு ரமணன் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 19) கூறியுள்ளார்.
சமூகப் பாதுகாப்பு ஆணையத்தின் அலுவலகத்திற்குச் சென்ற அவர் அங்குச் செய்தியாளர் சந்திப்பு நடத்தினார். அப்போது இந்த விவரங்களை வெளியிட்டார்.
“தினமும் கிட்டத்தட்ட 400,000 மலேசியர்கள் சிங்கப்பூருக்கு வேலைக்காகச் செல்கிறார்கள். அவர்களும் சமூகப் பாதுகாப்பு ஆணையத்தின் திட்டங்களுக்குக் கீழ் கட்டங்கட்டமாகக் கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார் அவர்.
“பயணிகளின் திட்டம் (Traveller Scheme) என்று அழைக்கப்படும் அந்தப் பாதுகாப்புத் திட்டத்தை எப்படி நடைமுறைப்படுத்தலாம் என்பது குறித்து ஆய்வு நடத்தப்படும். ஆய்வு குறித்தும் அதிகாரிகளிடம் பேசியுள்ளேன்,” என்று அமைச்சர் ரமணன் தெரிவித்தார்.
“வியாழக்கிழமை நான் மனிதவள அமைச்சராகப் பொறுப்பேற்றேன், இன்று சமூகப் பாதுகாப்பு ஆணையத்தின் அலுவலகத்தில் உள்ளேன். மக்களின் நலனில் கவனம் செலுத்துவதுதான் எனது முன்னுரிமை. பல மலேசிய மக்களுக்கு உதவி தேவைப்படுகிறது,” என்றார் அவர்.
“ஆயிரக்கணக்கான மலேசியர்கள் தினமும் மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் பயணம் செய்கிறார்கள், அவர்களின் “பாதுகாப்பு மிகவும் முக்கியமானது. யாரேனும் விபத்து போன்ற சம்பவங்களில் சிக்கினால் அவர்களுக்கு உடனடியாக உதவி கிடைக்க வேண்டும். அதனால்தான் இப்போது விரைவாக வேலையில் இறங்கியுள்ளேன்,” என்று அமைச்சர் ரமணன் செய்தியாளர்களிடம் கூறினார்.

