முவார்: மலேசியாவின் ஜோகூர் மாநிலத்தில் கூலாய் நகரில் ரப்பர் ஆலையில் ஏற்பட்ட தீயால் செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 24) ஏழு பள்ளிகள் பாதிக்கப்பட்டன.
அதனைத் தொடர்ந்து அந்தத் தீயால் ஏற்பட்டிருக்கக்கூடிய பாதிப்பை அறிவதற்கான ஆய்வின் அறிக்கையை மலேசியக் கல்வி அமைச்சு ஆராய்ந்து வருகிறது.
சம்பவம் தொடர்பில் முழுமையாக அறிக்கை கிடைத்துள்ளதாக மலேசிய கல்வி அமைச்சர் ஃபாட்லினா சிடெக் தெரிவித்தார். தீ, பள்ளிகளில் எப்படி கற்பிப்பு, கற்றல் நடவடிக்கைகளைப் பாதித்தது உள்ளிட்ட அம்சங்கள் அதில் இடம்பெற்றுள்ளதாக அவர் சொன்னார்.
“என்ன நடந்தது என்பதை ஒட்டுமொத்தமாக விவரிக்கும் அறிக்கை எங்களுக்குக் கிடைத்துள்ளது. தற்போது பாதிக்கப்பட்ட எல்லா பள்ளிகளும் வீட்டில் இருந்தபடி கற்பிக்கும் முறையைப் பின்பற்றுகின்றன. தீயினால் ஏற்பட்டுள்ள பாதிப்பு ஆராயப்பட்டு தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார் அவர்.
பள்ளி உள்கட்டமைப்பு, கற்றுலுக்குப் பயன்படுத்தப்படும் பொருள்கள், மாணவர்களின் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை அறிய முழுமையான சோதனை நடத்தப்படும் என்று திருவாட்டி ஃபாட்லினா குறிப்பிட்டார்.
குறிப்பிட்ட இரு பள்ளிகளில் மொத்தம் 80 மாணவர்களிடையே தலைவலி, இருமல், கண் உறுத்தல், மூச்சுத் திணறல் போன்ற மோசமற்ற நோய் அறிகுறிகள் காணப்பட்டதாக ஜோகூர் சுகாதார, சுற்றுச்சூழல் குழுத் தலைவர் லிங் டியென் சூன் வியாழக்கிழமை (பிப்ரவரி 26) தெரிவித்திருந்தார்.

