துபாய்: குவைத் அரசாங்கம் இவ்வாண்டுத் தொடக்கத்திலிருந்து ஆகஸ்ட் 19ஆம் தேதிவரை 25,000க்கும் மேற்பட்ட வெளிநாட்டினரை அவர்களின் சொந்த நாட்டிற்குத் திருப்பி அனுப்பிவிட்டது.
குடியிருப்பு, தொழிலாளர் சட்டங்களை மீறியதாகக் கூறி, சராசரியாக நாளொன்றுக்கு 108 பேர் நாடுகடத்தப்பட்டனர்.
சட்டத்தை மீறுவோரிடமிருந்து நாட்டைப் பாதுகாக்கும் நோக்கில், குறிப்பாக சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டோரைக் குறிவைத்து இந்த அதிரடி நடவடிக்கை இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டது.
நாடுகடத்தப்பட்டோரில் பல்வேறு சட்டங்களை மீறிய 10,000 பெண்களும் அடங்குவர். போதைப்புழக்கம், விநியோகம், பிச்சை எடுத்தல், தேசியப் பாதுகாப்பிற்குக் குந்தகம் விளைவிக்கும் செயல்பாடுகள் போன்ற காரணங்களுக்காகவும் பலர் தங்களது சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்பப்பட்டனர்.
குவைத்தில் அதன் சட்ட விதிமுறைகளை மீறி கிட்டத்தட்ட 100,000 பேர் தங்கியிருப்பதாக அந்நாட்டின் பாதுகாப்பு உயரதிகாரி ஒருவரைச் சுட்டி ‘கல்ஃப் நியூஸ்’ செய்தி வெளியிட்டுள்ளது.
நாடுகடத்தப்படுவோரின் எண்ணிக்கை இவ்வாண்டு இறுதிக்குள் 35,000ஐத் தாண்டிவிடும் என்றும் அவ்வதிகாரி கூறினார்.
விதிமீறுவோர்க்கு அடைக்கலம் கொடுக்கும் நிறுவனங்கள் அல்லது தனிமனிதர்களுக்குக் கடும் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.