சோல்: வடகொரியாவையும் ரஷ்யாவையும் இணைக்கும் தரைவழி பாலத்தைக் கூடிய விரைவில் திறக்க இருநாடுகளும் முனைப்புடன் செயல்படுவதாக வடகொரிய அரசாங்க ஊடகமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.
தூமென் ஆறு வழியாக அந்த நேரடி தரைவழி பாலம் அமைக்கப்படும். பாலத்துக்கான கட்டுமானப் பணிகள் ஓராண்டுக்குமுன் தொடங்கின.
சுற்றுலா, வர்த்தகம், மக்கள் நடமாட்டம் ஆகியவற்றுக்கு அந்தப் பாலம் மிக முக்கிய பங்கு வகிக்கும் என்று கேசிஎன்ஏ சொன்னது.
ரஷ்யாவின் நெடுஞ்சாலையுடன் இணையும் 850 மீட்டர் பாலத்தை உருவாக்க 2024ஆம் ஆண்டு ஒப்புக்கொள்ளப்பட்டது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் வடகொரியாவுக்கு அப்போது அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டார்.
இதற்கிடையே, பால இணைப்பை அனுசரிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 21) ரஷ்யாவும் வடகொரியாவும் சிறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்ததாக மாஸ்கோ டைம்ஸ் சொன்னது.

