ஜகார்த்தா: இந்தோனீசியாவின் ஆகப் பெரிய குப்பைக் கிடங்கில் ஏற்பட்ட விபத்தில் காணாமற்போன ஐவரை மீட்புப் பணியாளர்கள் தொடர்ந்து தேடிவருகின்றனர்.
வார இறுதியின்போது குப்பைக் கிடங்கில் உள்ள பெரிய குப்பைக் குவியல் சரிந்து விழுந்ததில் குறைந்தது நால்வர் மாண்டதை அதிகாரிகள் திங்கட்கிழமை (மார்ச் 9) உறுதிப்படுத்தினர்.
தலைநகர் ஜகார்த்தாவிற்குப் புறநகரில் உள்ள பெகாசி என்ற இடத்தில் உள்ள பண்டார்கெபாங் குப்பைக் கிடங்கில் விபத்து நேர்ந்தது என்றார் உள்ளூர் மீட்பு அமைப்பின் தலைவர் டெசியானா கார்த்திகா பஹாரி.
மார்ச் 7ஆம் தேதியிலிருந்து விடாமல் பெய்த கனத்த மழையால் குப்பைக் குவியல் சரிந்திருக்கக்கூடும் என்று ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் திருவாட்டி டெசியானா கூறினார்.
குப்பைக் குவியல் சரிந்தபோது ஒருசில கனரக வாகனங்கள் குப்பையை அங்குக் கொட்டிக்கொண்டிருந்ததாகக் கூறிய அவர், அருகில் ஒரு உணவுக் கடையும் இருந்ததைப் பகிர்ந்துகொண்டார்.
கனரக வாகன ஓட்டுநர்களும் துப்புரவாளர்களும் குப்பைக் குவியல் விபத்தில் காணாமற்போனவர்கள் என்ற திருவாட்டி டெசியானா, இன்னும் அதிகமானோர் குவியலின்கீழ் புதைந்திருக்கக்கூடும் என்றார்.
இந்நிலையில், சம்பவத்தின்போது அங்கிருந்தோரில் நால்வர் உயிருடன் தப்பினர்.
காவல்துறை அதிகாரிகள், ராணுவ அதிகாரிகள் என 200க்கும் அதிகமானோர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்கள் 17 அகழ்வு இயந்திர வாகனங்களைக் கொண்டு தேடல் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
ஏறக்குறைய 110 ஹெக்டர் பரப்பளவில் உள்ள பண்டார்கெபாங் குப்பைக் கிடங்கில் ஒவ்வொரு நாளும் 6,500 டன்னிலிருந்து 7,000 டன் வரையிலான குப்பைகள் கொட்டப்படுகின்றன.

