லாவோஸ் குகை விபத்து: சிக்கிய 7 பேரில் முதல் நபர் உயிரோடு மீட்பு

லாவோஸ் குகை விபத்து: சிக்கிய 7 பேரில் முதல் நபர் உயிரோடு மீட்பு

1 mins read
3d04158f-1aee-4a58-a703-9c4a1f938d0a
லாவோஸ் நாட்டின் குகையொன்றில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகச் சிக்கியிருந்த 7 பேரில் முதல் நபர், அனைத்துலக மீட்புக்குழுவினரால் உயிரோடு மீட்கப்பட்டுள்ளார். - படம்: ஏஎஃப்பி

வியந்தியன்: லாவோஸ் நாட்டின் குகையொன்றில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாகச் சிக்கியிருந்த 7 பேரில் முதல் நபர், வெள்ளிக்கிழமை (மே 29) அனைத்துலக மீட்புக்குழுவினரால் பத்திரமாக உயிரோடு மீட்கப்பட்டுள்ளார்.

மரணக் குகையில் தொடரும் மீட்புப் பணி

ஸேசொம்பௌன் மாநில மலைப்பகுதியில் உள்ள குகைக்குள் தங்கம் தேடுவதற்காகச் சென்ற 7 பேர், கடந்த மே 20 முதல் பலத்த மழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக வெளியேற முடியாமல் உள்ளேயே முடங்கினர். 

அவர்களை மீட்கும் பணியில் தாய்லாந்து, ஆஸ்திரேலியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்த அனைத்துலக நிபுணத்துவ முக்குளிப்பாளர் குழுக்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

குகையின் நுழைவாயிலில் இருந்து கிட்டத்தட்ட 300 மீட்டர் தொலைவில் உள்ள குறுகிய, உயரமான பகுதியில் ஐந்து பேர் உயிருடன் இருப்பது கடந்த புதன்கிழமை கண்டறியப்பட்டது. 

உடல் முழுவதும் சேறும் சகதியுமாகக் காணப்பட்ட நிலையில் நெஞ்சுவலி, கடுமையான பசி ஆகியவற்றால் சோர்வடைந்திருந்த அவர்களில் ஒருவர் மட்டும் மீட்கப்பட்டுள்ளார்.

நீடிக்கும் சவால்கள்

குகைக்குள் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதாலும், சேறு கலந்த தண்ணீர் உள்ளதாலும் நீருக்கடியில் எதையும் பார்க்க முடியாமல் மீட்புக் குழுவினர் கடுமையான சவால்களைச் சந்தித்து வருகின்றனர்.

குகைக்குள் இருக்கும் மற்ற 4 பேரின் உடல்நிலையை ஆய்வு செய்து அவர்களையும் விரைவில் வெளியே மீட்கவும், இன்னும் கண்டறியப்படாத எஞ்சிய 2 பேரைத் தேடும் பணியையும் அயராது தொடரவும் உள்ளதாகத் தாய்லாந்து மீட்புக்குழு உறுப்பினர் கெங்கார்ட் போங்காவோங் தெரிவித்துள்ளார்.

குறிப்புச் சொற்கள்