உம்ரா யாத்திரைக்காக மெக்கா சென்றபோது பேருந்து விபத்துக்குள்ளாகி 20 பேர் இறந்துவிட்டதாகவும் 29 பேர் காயமடைந்ததகாவும் சவூதி அரேபிய ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
திங்கட்கிழமை (மார்ச் 27) நிகழ்ந்த இவ்விபத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.
அப்பேருந்தில் பயணம் செய்தவர்கள் உள்நாட்டினரும் வெளிநாட்டவர்களும் அடங்குவர்.
மலைப்பகுதியில் ஒரு பாலத்தின்மீது பேருந்து சென்றுகொண்டிருந்தபோது அதன் நிறுத்துகருவி (பிரேக்) செயல்படவில்லை எனக் கூறப்பட்டது. இதனால், பாலத்தின் முடிவில் அதன் தடுப்புச்சுவர்மீது மோதிய பேருந்து, பின்னர் குப்புறக் கவிழ்ந்து, தீப்பிடித்ததாக உள்ளூர் ஊடகச் செய்திகள் கூறின.
காயமடைந்த பயணிகள் சிகிச்சைக்காக மருத்துவமனைகளுக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
புனித ரமலான் மாதம் தொடங்கிவிட்ட நிலையில், உம்ரா சமயக் கடமையாற்றுவதற்காக உலகெங்கும் இருந்தும் ஏராளமான முஸ்லிம்கள் மெக்காவில் திரள்வது வழக்கம்.