லெபனான் அமைதிப்படையினருக்கு அதிக பாதுகாப்பு தேவை: இந்தோனீசியா

லெபனான் அமைதிப்படையினருக்கு அதிக பாதுகாப்பு தேவை: இந்தோனீசியா

2 mins read
ஐ.நா. அமைதிப்படையினரின் பாதுகாப்பில் எவ்வித பேரத்துக்கும் இடமில்லை: இந்தோனீசியா
3cb5963d-611c-4933-b70f-312d0847f091
மறைந்த இந்தோனீசிய வீரர் ரிக்கோ பிரமுதியாவின் நல்லுடலைச் சுமந்து வரும் சக அமைதிப்படையினர். ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 26) பெய்ரூட்டில் அவரது உடலுக்கு ராணுவ மரியாதை வழங்கும் சடங்கு நடந்தது. - படம்: ஏஎஃப்பி

ஜகார்த்தா: லெபனானின் அமைதிப்படையில் பணியாற்றும் தமது வீரர்களுக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு, அதிக பாதுகாப்பை வழங்கவேண்டும் என்று இந்தோனீசியா அறைகூவல் விடுத்தது.

மார்ச் மாதம் அறிவிப்பின்றி இஸ்ரேல் லெபனானில் நடத்திய திடீர் தாக்குதலில் நான்கு இந்தோனீசிய வீரர்கள் படுகாயமுற்று பின் மரணமடைந்தனர்.

அதனால், ஐக்கிய நாடுகள் அமைப்பு அமைதிப்படை வீரர்களுக்கான பாதுகாப்பு அம்சங்களை ஆராய்ந்து தகுந்த முன்னேற்பாடுகளை செய்யும்படி இந்தோனீசியா கேட்டுக்கொண்டது.

கடந்த ஏப்ரல் 24ஆம் தேதி ஐக்கிய நாடுகளின் லெபனானுக்கான தற்காலிக அமைதிப்படை (UNIFIL) இந்தோனீசியாவின் ராணுவ வீரர் ரிக்கோ பிரமுதியாவின் மரணச் செய்தியை வெளியிட்டது. அந்த அமைப்புடன் ஒருங்கிணைந்து பெய்ரூட்டில் இயங்கிய சிறந்த மருத்துவக் குழுவினரைக் கொண்டு உகந்த சிகிச்சைகள் திரு ரிக்கோவுக்கு வழங்கப்படுவதை உறுதி செய்ததாக அதே நாளில் இந்தோனீசிய வெளியுறவு அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

மார்ச் 29ஆம் தேதி, லெபனானிய நகரான ஆட்சித் அல் கசேர் என்ற இடத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் அவர் படுகாயமடைந்தார். பெய்ரூட்டின் செயின்ட் ஜார்ஜ் மருத்துவமனையில் அவர் தீவிர சிகிச்சை பெற்று பலனின்றி உயிரிழந்தார்.

மார்ச் மாதம் நடந்த தாக்குதலை வன்மையாகக் கண்டித்த இந்தோனீசிய அரசாங்கம், அமைதிப்படையினருக்கு எதிரான எவ்விதத் தாக்குதலும் போர் குற்றமாக வகைப்படுத்தப்படவேண்டும் என வலியுறுத்தியது.

நடந்த சம்பவத்தின் முழு விவரங்களைக் கோரிய இந்தோனீசியா, உடனடியான, வெளிப்படையான, தீவிர விசாரணை நடக்கவேண்டும் என்று நிபந்தனை விதித்தது. தாக்குதலுக்கான காரணத்தையும் அது கோரியது.

லெபனானில் உள்ள தமது அமைதிப்படையினரின் பாதுகாப்பை உறுதி செய்யும்படி ஐக்கிய நாடுகள் அமைப்பை இந்தோனீசியா கேட்டுக்கொண்டது.

“ஐக்கிய நாடுகள் அமைதிப்படையினரின் பாதுகாப்புக்குத் தலையாய முன்னுரிமை வழங்கப்படும். அதில் எவ்வித பேரத்துக்கும் இடமில்லை,” என்று வெளியுறவு அமைச்சு அதன் அறிக்கையில் அழுத்தமாகக் குறிப்பிட்டது.

குறிப்புச் சொற்கள்