செர்டாங்: இனம், சமயம், வட்டாரம் ஆகியவற்றின் அடிப்படையில் மலேசியாவைப் பிளவுபடுத்த முற்படுபவர்களை மலேசியர்கள் நிராகரிக்க வேண்டும் என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் வலியுறுத்தியுள்ளோர்.
சனிக்கிழமையன்று நடைபெற்ற மலேசியாவின் தேசிய தின உரையின்போது திரு அன்வார் இவ்வாறு கூறினார். மலேசியா தனிநாடானதிலிருந்து ஒற்றுமையே அதற்குப் பலத்தைத் தந்ததாகவும் நாட்டின் வெற்றிக்கு ஆணிவேராக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
நாட்டின் முன்னோடித் தலைமுறையினர் செய்த தியாகங்களால் மலேசியா சுதந்திர நாடானது என்றும் இதை எதிர்காலத் தலைமுறையினர் மறந்துவிடக்கூடாது என்றும் பிரதமர் அன்வார் நினைவூட்டினார்.
“எண்ணிலடங்காத் தியாகங்கள் ஏற்பட்டன. உயிர், சொத்து, கண்ணீர் என அடுக்கிக்கொண்டே போகலாம். இதை இளம் தலைமுறையினர் தெரிந்துகொள்ள வேண்டும். மலேசியா இதுவரை சாதித்திருக்கும் அனைத்துக்கும் அப்போது ஒரு விலை கொடுக்க வேண்டி இருந்தது.
“மலேசியா தனித்துவம் வாய்ந்த நாடு. பல்வேறு இனங்கள், சமயத்தினர் ஒன்றாக வாழும் நாடாக இருந்தாலும் நீடிக்கும் அமைதி, பொருளியல் வளர்ச்சி, வலுவடையும் ஒற்றுமையுடன் திகழும் ஒரே நாடாக இருக்கிறது,” என்றார் பிரதமர் அன்வார்.
இன ரீதியாகப் பிளவுபடும் எந்த நாடாலும் நீடித்திருக்க முடியாது என்று குறிப்பிட்ட திரு அன்வார், நாட்டு மக்களிடையே ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமை இல்லாவிடில் சுதந்திரம் பெற முடியாது என்று கூறினார்.