கேன்பரா: ஆஸ்திரேலிய மருத்துவர்கள் மாது ஒருவரின் மூளையில் உயிருள்ள புழு ஒன்றைக் கண்டெடுத்துள்ளனர்.
உலகில் இத்தகைய முதல் கண்டுபிடிப்பு இது.
ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தையும், கேன்பரா மருத்துவமனையையும் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் அந்தப் புழு கண்டுபிடிக்கப்பட்டதன் தொடர்பிலான தகவல்களை செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட புதிய ஆய்வு ஒன்றில் விவரமாகத் தெரிவித்தனர்.
அந்த 8 சென்டிமீட்டர் புழு பெரும்பாலும் மலைப்பாம்புகளில் காணப்படும். இருப்பினும், இம்முறை அது 64 வயது நோயாளியின் மூளையிலிருந்து வெளியேற்றப்பட்டது. மூளை அறுவை சிகிச்சைக்குப் பிறகு, அந்தப் புழு இன்னும் உயிருடன் நெளிந்துகொண்டிருந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
2021ஆம் ஆண்டில் அந்த மாது நியூ சவுத் வேல்ஸில் உள்ள உள்ளூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டது. அவர் மூன்று வாரங்களாக வயிற்று வலியாலும் வயிற்றுப்போக்காலும் அவதியுற்றிருந்தார்.
அதன் பிறகு அவர் மறதியாலும் மனச்சோர்வாலும் பாதிக்கப்பட்டார்.
கேன்பரா மருத்துவமனையில் உள்ள நரம்பியல் அறுவை சிகிச்சை மருத்துவர், சோதனைகளுக்குப் பிறகு மாதின் மூளையில் உள்ள வலதுப் பகுதியில் வழக்கத்திற்கு மாறாக ஏதோ ஒன்று இருப்பதைக் கண்டார். அதனால் மாது அறுவை சிகிச்சையை மேற்கொள்ளவேண்டியிருந்தது.
அப்புழு மலைப்பாம்பு ஒன்றிடமிருந்து புற்களில் வெளியாகியிருக்கக்கூடும் என்றும் மாது அந்தப் புற்களைத் தொட்டு அல்லது சாப்பிட்டிருக்கக்கூடும் என்றும் ஊகிக்கப்படுவதாக ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
தொற்றுநோய், மூளை நிபுணர்கள் அந்த மாதைத் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.