லண்டன்: இந்திய சுதந்திரப் போராட்டத்துடன் தொடர்புடைய வரலாற்றுச் சிறப்புமிக்க இந்தியா கிளப் உணவகத்தின் கதவுகள் நிரந்தரமாக மூடப்படவுள்ளன.
வரும் ஞாயிற்றுக்கிழமை அது தன் கடைசி உணவைப் பரிமாறத் தயாராகி வருகிறது.
அந்த உணவகத்தின் மறுமேம்பாட்டுத் திட்டத்தை நிறுத்த முடியாமல் போனதால் அதை நிரந்தரமாக மூட அதன் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
மிகவும் பரபரப்பாக இயங்கும் மத்திய லண்டனில் இந்த உணவகம் இருக்கிறது.
பிரிட்டிஷ் ஆட்சியில் இருந்து இந்தியாவை விடுவிக்க பிரிட்டனில் இருந்து குரல் கொடுத்த இந்திய லீக் பிரசாரக் குழுவைச் சேர்ந்த உறுப்பினர்களால் இந்த உணவகம் இந்தியா சுதந்திரம் அடைந்த நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தொடங்கப்பட்டது.
பல ஆண்டுகளாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த லண்டன்வாசிகள் உட்படப் பலரை இந்த இந்திய உணவகத்தின் மசாலா தோசை ஈர்த்துள்ளது.
“இந்தியாவிலிருந்து வரும் மாணவர்கள், பத்திரிக்கையாளர்கள், சுற்றுப்பயணிகள் போன்ற பலருக்கும் வீட்டு உணவைப் போன்ற சுவை மிகுந்த உணவை நல்ல தரமான முறையிலும் மிகவும் மலிவான விலையிலும் இந்த இந்திய உணவகம் வழங்கியது.
“அத்துடன் பலரைச் சந்திக்கவும் அவர்களுடனான நட்புறவை மேம்படுத்தவும் வசதியான சூழ்நிலைகளையும் உருவாக்கி தந்தது,” என இந்திய நாடாளுமன்ற உறுப்பினரான சசி தரூர் கூறினார்.
அவருடைய மறைந்த தந்தை திரு சந்திரன், இந்தியா கிளப் உணவகத்தை நிறுவ உதவி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.